...

"வாழ்க வளமுடன்"

21 மே, 2011

ஆரோக்கியத்தின் கண்ணாடி சருமம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள் நேர்த்தியான அழகும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும்.


அறிவையும்அழகையும்தன்னம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து காட்டி, செயல்படும் பெண்களே சாதனைக்குரியவர்களாக உருவாகிறார்கள்.


அழகு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சருமத்தின் நிறம். சிவப்பு நிறம் எல்லா பெண்களும் விரும்பும் நிறமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சருமத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக எத்தனை சதவீத பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்?


மனித உடலில் இருக்கும் பெரிய உறுப்பு எது? சருமம்தான் உடலில் மிகப்பெரிய உறுப்பு. இஷ்டத்திற்கு நெகிழக்கூடியதும் அதுதான். ஒருவரது சருமம் 24 சதுர அடி சுற்றளவும், நான்கு கிலோவிற்கும் சற்று அதிகமான எடையையும் கொண்டது.
சருமம், உடலை மூடிப் பாதுகாக்கும் போர்வையா? அல்லது ஆபரணமா? இரண்டுமே இல்லை. சருமத்திற்கென்று முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன.


நன்றாக வெயிலடிக்கும் காலத்தில் உடலில் இருக்கும் தண்ணீர்தன்மை வற்றிவிடாமல் பாதுகாக்கும் சருமம், மழைக்காலத்தில் “வாட்டர் புரூப்” போல் செயல்பட்டு உடல் குளிர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது.


சருமத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். வெளியே தெரிவது “எபிடெர்மிஸ்”. உள்புறமாய் அமைந்திருப்பது, டெர்மிஸ். எபிடெர்மிசில் பல அடுக்குகள் உள்ளன. அதன் அடி அடுக்கில் இருக்கும் அடிப்படை செல்கள் நிரந்தரமாக உருவாகி பெருகிக்கொண்டே இருக்கும். புதிய செல்கள் பெருகி மேல் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மேலே இருப்பவை டெட்செல்களாகி உதிர்ந்து கொண்டிருக்கும். ஒரு செல் புதிதாக புறப்பட்டு வந்து, உதிர்ந்து போக மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். உள்பகுதியில் இருக்கும் டெர்மிசில் பல்வேறு வகையான சுரப்பிகள், ரத்தக்குழாய்கள், மயிர்க்காலின் அடிப்பகுதி போன்றவைகளெல்லாம் இருக்கின்றன.


நுண்ணிய சிறு பகுதி சருமத்தில் மட்டும் ஒரு கோடி செல்கள் இருக்கும். ஒரு பெண்ணின் மொத்த உடல் சருமத்தில் 30 பில்லியன் செல்கள் இருக்கும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) சருமத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 50 ஆயிரம் சரும செல்கள் உதிர்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த பரிணாம மாற்றங்களால் ஒருவர் தன் ஆயுளில் 20 கிலோவரையான சருமத்தை உதிர்க்கிறார்.


சருமத்தில் புதிய செல்கள் உருவாகுவதும், பழையவை உதிர்வதும் எல்லா பருவத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 18 வயது பெண்ணுக்கு இந்த பரிணாம மாற்றங்கள் நிகழ இரண்டு வாரங்கள் போதும். அவர் ஐம்பது வயது பெண்மணியாகும்போது அந்த மாற்றங்கள் நிகழ ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும். வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும்.


சரும செல்கள் ஒருவகை இறப்பு நிலையை அடையும்போது, அதிலிருந்து கெரோட்டின் உருவாகிறது. இந்த கெரோட்டின்தான் நகம் மற்றும் முடியின் அடிப்படை. வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தலை முடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். ஒரு மாதம் அது 1.25 செ.மீ. வளரும். தொடர்ந்து இப்படியே வளர்ந்து கொண்டிருக்காது. ஐந்து ஆறு மாதங்கள் கழித்து சிறிது காலம் ஓய்வெடுக்கும். சுழற்சி அடிப்படையில் பத்து சதவீத முடி ஓய்வெடுக்கும்போது 90 சதவீதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும்.

ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் முடிகளே குளிக்கும் போது உதிர்கின்றன. (அதனால் முடி உதிர்வதை நினைத்து ரொம்ப கவலைப்படாதீங்க) முடி, கண்களின் கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறம் தருவது மெலானின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தை கடுமையாகத் தாக்கும்போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலானின் உதவுகிறது. தொடர்ச்சியாக சருமத்தின் ஒரு பகுதியின் கடுமையான சூரிய கதிர்கள் பட்டால் அந்த பகுதியில் மெலானின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்துப் போய்விடும்.


சருமத்தின் மென்மையும், நிறமும், சுருக்கமற்ற மினுமினுப்பும் ஆரோக்கியம் மற்றும் அழகின் வெளிப்பாடாக இருக்கிறது. வெளிநாட்டினரைப் போல் வெள்ளை நிறமாக சருமம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த நிறம் பல்வேறு துறைகளில் வெற்றிபெற படிக்கட்டு என்று நினைக்கும் பெண்களும் ஏராளம்.

ஆனால் வெள்ளை நிற சருமம் ஒரு சில நோய்களை வரவேற்பதாக இருக்கிறது. சருமம் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டினருக்கு நம் நாட்டைவிட சரும புற்று நோய் அதிகம் வருகிறது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட தங்கள் சருமம் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லையே என்று வெளிநாட்டு பெண்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் கடற்கரை பகுதியில் படுத்து “சன் பாத்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் கறுக்காமலும், அதிகம் சிவக்காமலும் இருக்கும் சருமமே ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் ஏற்றதாக இருக்கிறது.
முகத்தை மனதின் கண்ணாடி என்று சொல்வார்கள். அதுபோல் சருமத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். உடலில் நோய்கள் இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தின் நிறத்தை சிவப்பாக மாற்ற முடியுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.


மெலானின் மற்றும் சில வர்ண கட்டமைப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு நிறம் கொடுக்கிறது. வாழ்க்கை சூழலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒருவகை காரணம். குளிர்ச்சி அதிகமுள்ள நாடுகளில் நம் நாட்டு பெண்கள் சில வருடங்கள் வசித்தால் அவர்கள் சரும நிறமும் ஓரளவு கலராக மாறும். அதிக வெயிலடிக்கும் கால நிலையிலும், மாசு நிறைந்த சுற்றுப்புறத்திலும் வசித்தால் நிறம் கறுக்கவும் செய்யும்.


சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி செய்தல், உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்தல், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும். பெண்களின் சரும நிறத்தில் பாரம்பரிய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.


சருமத்தின் நிறத்தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. என்றாலும் நவீன அழகுக்கலை பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வீட்டிலே செய்யும் குறிப்பிட்ட பராமரிப்பு முறைகள் மூலம் நிறத்தை குறிப்பிட்ட அளவுவரை மேம்படுத்தலாம்.
தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவைகளை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்பது சரியா?


குறிப்பிட்டுச் சொன்னால் இதனால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. இயற்கையான நிறத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. நன்றாக பராமரித்து, வெயிலில் செல்லாமல் இருந்தாலே சருமத்தின் நிறம் ஓரளவு மேம்படத் தொடங்கிவிடும். தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக செயல்படுகிறது. ஓரளவு நிறத்தை தரும் சக்தி இதற்கு இருக்கிறது.


சிவப்பு நிறமான சருமத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை முரண்பாடாக இருந்தால் அவர்கள் சருமத்தின் நிறமும் மாறிக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாதவரை சரும நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. அழகான சருமத்தைப் பெற இன்னும் ஆலோசனைகள் உண்டு.


***
thanks vayal
***





"வாழ்க வளமுடன்"

2 comments:

மதுரை சரவணன் சொன்னது…

சருமத்தைப் பற்றி அற்புதமான விசயங்களை தெரிவித்த உங்களுக்கு நன்றீ... வாழ்த்துக்கள்

prabhadamu சொன்னது…

/// மதுரை சரவணன் கூறியது...
சருமத்தைப் பற்றி அற்புதமான விசயங்களை தெரிவித்த உங்களுக்கு நன்றீ... வாழ்த்துக்கள்
////



நன்றி மதுரை சரவணன்.

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "