...

"வாழ்க வளமுடன்"

24 மே, 2011

ATM திருட்டை தடுப்பது எப்படி?



நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும்.


நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாக Enter செய்யுங்கள்.

எடுத்துகாட்டாக:

உங்களுடைய PINNumber 1234 என்றால் 4321 என்று Enter செய்யுங்கள்.

இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு மட்டுமில்லாமல் ஓசைபடாமல்
போலீஸ்-க்கும் தகவல் அளித்துவிடும் .


அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று. தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.


***
thanks kovai
***



"வாழ்க வளமுடன்"

ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஏற்படும் பாதிப்பு - தீர்வு !!!



அன்ன நடை... சின்ன இடை... என பெண்களின் ஆரம்பகால நடை அழகு எல்லாம் நடையைக் கட்டிவிட்டது. செருப்புக்கு கீழே ஸ்டூல் வைத்த மாதிரி ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு 'பூனை வாக்’ போவதுதான் இப்போதைய ஃபேஷன்!

''பூனை வாக் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஏற்படும் பாதிப்பு களையும் மனதில் கொள்ள வேண்டும்!'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜா!

'அழகு என்றால், கூடவே ஆபத்தும் இருக்கத்தானே செய்யும். அதை எல்லாம் நாங்க ஒரு கை பார்த்துடுவோம்ல' என்று இளமைத் துள்ளலில் இந்த எச்சரிக்கையை அலட்சிய மாகக் கடக்க வேண்டாம். டாக்டர் விரிவாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு, ஹை ஹீல்ஸுக்குள் காலைச் செருகுங்கள் பார்க்கலாம்!


''ஃபேஷன், பர்சனாலிட்டி வசதிக்காகத்தான் பெண்கள் ஹீல்ஸ் அணிகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு வசதியாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா! பொதுவாக, ஒன்றரை இன்ச் அளவுக்குக் கீழ் உள்ள ஹீல்ஸைப் பயன்படுத்தலாம். இதனால் பாதிப்புகள் இருக்காது. அதற்கு மேல் அணியும்போதுதான், உடல் அவதிகள் வரிசை கட்டும்.


ஹை ஹீல்ஸின் பாதிப்பு, நம் நடையின் இயல்பான சாயலையே மாற்றிவிடும். நார்மலாக பெண்களின் இடை, 'எஸ்' வடிவ வளைவுடன் இருக்கும். ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் அணிபவர்களுக்கு அந்த வளைவின் அழகு மாறும். இடுப்புத் தசைகள் இறுகுவதுடன், கால் முட்டி முன்பக்கமாக வளைந்து காணப்படும்!'' என்று புறத்தோற்ற மாறுதல்களை விளக்கியவர், உள் பாதிப்புகளைத் தொடர்ந்தார்.


''நம் பாதம்... முன்பகுதியான 'ஃபோர் புட்’, நடுப்பகுதியான 'மிட் ஃபுட்’ மற்றும் பின் பகுதியான 'ஹைண்ட் ஃபுட்’ என மூன்று பகுதிகள் ஒருங்கிணைந்தது. காலணி அணியும்போது முன் பகுதி நன்றாக அசைக்கக்கூடிய வகையிலும், நடுப்பகுதி நல்ல சப்போர்ட்டுடனும், பின் பகுதி வசதியாகவும் காலணிக்குள் பொருந்த வேண்டும். முக்கியமாகப் பாதத்தின் ஆர்ச் பகுதியை நன்றாகப் பிடித்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடம்பின் எடையை பாதம் பேலன்ஸ்டாக தாங்க வசதியாக இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் அணியும்போது மொத்த உடல் எடையில் 75 சதவிகிதம் முன் பாதத்தில் இறங்கிவிடும். அதனால் முன் பாதத்தில் ஆணிக்கால், காய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், குதிகால் பாதிப்புடன் ஆடுதசை பகுதியும் இறுக்கமாகலாம்.


தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும்போது, முழங்கால் மூட்டின் உள் பகுதியான 'மீடியல் கம்பார்ட்மென்ட்’-ல் தேய்மானம் ஏற்படும். ஒரு கட்டத்தில், முழங்கால் மூட்டில் தேய்மானம் அதிகமாவதுடன், முதுகுப் பகுதியிலும் எலும்பு தேய வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவுகள்... உடல் இயக்கத்தையே சிரமப்படுத்தும்.


மொத்தத்தில் பார்ட்டி, ஃபங்ஷன் என்று ஓரிரு மணி நேரம் வரை ஹீல்ஸ் அணியலாம். தவறு இல்லை. டெய்லி யூஸ் என்றால், பத்து மில்லி மீட்டர் உயரம் கொண்ட ஃப்ளாட் செப்பல்களே பெஸ்ட்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் டாக்டர் ராஜா.


'காலுக்குப் பத்தாத செருப்பை கழட்டி எறி!’

- பாட்டிகள் அடிக்கடி சொல்லும் இந்தப் பழமொழியுடன் முடிக்கலாம்தானே இந்தக் கட்டுரையை!

***

டாக்டர் ராஜா சொல்லும் டிப்ஸ்

காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.


ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.


சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ்’ அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ்’ அணியலாம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்’ ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்’ தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ்’ அணிய வேண்டும்.


***

இளம் கல்லுரி பெண்கள் அளிக்கும் டிப்ஸ்

தங்களின் ஹை ஹீல்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்கள்...

சிந்து (மாடல்) :

''ஒரு பார்ட்டிக்காக மூன்றரை இன்ச் பாயின்ட்டட் ஹீல்ஸ் போட்டுட்டுப் போனேன். காலையில இருந்து சாயங்காலம் வரை ஒருவித அசௌகரியத்தோடயே இருந்தேன். வீட்டுக்கு வந்தா, கால் வலி உயிர் போயிடுச்சு. வெதுவெதுப்பான நீர்ல ஒத்தடம் கொடுத்தாங்க அம்மா. மறுநாள் டாக்டர்கிட்ட போயும், ஒருவாரம் கழிச்சுதான்தான் சரியாச்சு வலியும் வீக்கமும். அன்னியோட ஹீல்ஸுக்கு சொல்லிட்டேன் பெரிய 'பை'!''

*

அருட்செல்வி

(தொகுப்பாளினி, மக்கள் தொலைக்காட்சி):

''நான் மீடியம் ஹைட் ஹீல்ஸ் போடுவேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹை ஹீல்ஸோட பஸ்ல ஏறி தடுக்கி விழுந்து அடி, அவமானப்பட்டதை பார்த்ததில் இருந்து ஹீல்ஸை சுத்தமா விட்டுட்டேன்.''

*

நிவேதா சீனிவாசன்

(மருத்துவக் கல்லூரி மாணவி, சென்னை):

''நான் ரெகுலராவே ஹீல்ஸ் யூஸ் பண்ணினேன். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியலை. போகப் போக கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி பிரச்னைகள் படுத்துச்சு. ஆனாலும், என்னால ஹீல்ஸ் க்ரஷ்-ஐ விட முடியலை. அவுட்டிங்-க்கு மட்டும் போடறது, ஃபங்ஷனுக்கு மட்டும் போடறதுனு இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஹீல்ஸ் பழக்கத்தை கஷ்டப்பட்டு குறைச்சுட்டு இருக்கேன்!''



***
thanks அவள் விகடன்
***





"வாழ்க வளமுடன்"

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்


எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.


தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.


* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.


* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.


* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.


* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.


* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.



***
thanks koodal
***



"வாழ்க வளமுடன்"

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்கள் – தொடர்ச்சி





ஆனால் பால் வைக்கப்பட்டிருப்பது சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெகுதொலைவில் வைக்கப்பட்டிருப்பதன் காரணம், உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே அதிகதூரம் நடக்கவைப்பது.


*



ஏன் நடக்க வைக்கிறார்கள்? ஏதாவது பாதயாத்திரை பயிற்சியா?

இல்லை. அதிக நேரம் உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்குள் தங்க வைக்க விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால்தான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகநேரம் உங்கள் கண்களில் படும். அதிகநேரம் கண்களில் படும்போது, அந்தப் பொருட்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் இலவச விளம்பரம்.

ஒரு புத்திசாலித்தனமான சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் வாயிலில் இருந்து பால் இருக்கும் இடத்துக்கு நடந்து செய்லும் பாதையின் இருபுறமும் பரொமோஷனல் ஐட்டம்கள், உங்களின் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.


சூப்பர் மார்க்கெட்டில் பால் வைக்கப்பட்டிருப்பது எங்கே?
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த புரொமோஷனல் ஐட்டம்கள் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கின்றன என்று பாவனையாளருக்குத் தெரியப்படுத்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? விளம்பரம் செய்ய வேண்டும்.

பத்திரிகையிலோ, டிவியிலோ, ரேடியோவிலோ, இணையத்தளத்திலோ அதை விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும், அந்த விளம்பரத்தை உங்களைப் பார்க்க வைத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு வரவைக்கவும் வேண்டும். ஒருவேளை விளம்பரத்தைப் பார்த்து 3 நாட்களின்பின் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது, அந்த விளம்பரம் உங்களது மனதிலிருந்து மறைந்தும் விட்டிருக்கலாம்.

ஆனால், இதோ நீங்கள் பால் எடுக்கச் செல்லும் பாதையில் அவர்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய பொருட்களையே கவர்ச்சிகரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். விளம்பரச் செலவு கிடையாது. பத்திரிகை விளம்பரத்தை நீங்கள் பார்த்துவிட்டு 3 நாட்களில் அதை மறந்து விடுவது போல இல்லாமல், விளம்பரப்படுத்தப்படும் பொருள் உங்கள் கைக்கெட்டிய தொலைவிலேயே இருக்கிறது.


*



இலவச விளம்பரம்! உடனடி விற்பனை!!

இரண்டாவது பாலை மாத்திரம் வாங்கும் உத்தேசத்துடன் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தால், அவை வாயிலுக்கு அருகே வைக்கப்பட்டடிருந்தால் அவற்றை எடுத்து, காசைக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்து விடுவீர்கள். சூப்பர் மார்க்கெட்டில் டிஸ்பிளே செய்யப்பட்டிருக்கும் மற்ற எந்தப் பொருளும் உங்கள் கண்களில் பட்டிருக்காது.


தாய்லாந்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்



அதனால்தான் பாவனையாளர் அதிக தடவைகள் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்றிருக்கும் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தொலைவில் வைக்கிறார்கள். அதை எடுக்கப் போகும்போது நீங்கள் மற்றைய பொருட்களையும் பார்க்கப் போகின்றீர்கள். அப்போது உங்கள் மனதில் சில எண்ணங்கள் தோன்றுப் போகின்றன.

“அட இந்தப் பொருளைத்தானே வீட்டில் மறக்காமல் வாங்கிவரச் சொன்னார்கள். நல்லவேளை இப்போது கண்களில் பட்டதே”

“இந்தப் பொருள் பார்க்க நன்றாக இருக்கிறதே. சும்மா ஒரு தடவை வாங்கிப் பார்க்கலாமா?”

“ஓகோ இந்தப் பொருளும் இங்கே விற்பனையாகிறதா? எங்கே வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”

“வாவ். இந்தப் பொருளின் விலை இவ்வளவுதானா, மலிவாக இருக்கிறதே. வாங்கிப் பார்க்கலாமா?”

பால் பாக்கட்டை எடுப்பதற்கு சூப்பர் மார்க்கெட்டின் கடைசி ஷெல்ஃப்வரை நடக்கும் பத்துக்கு இரண்டு பேருக்காவது மேற்கண்ட யோசனைகளில் ஏதாவது தோன்றினால் சூப்பர் மார்க்கெட்காரருக்கு வெற்றி. பத்துக்கு நான்கு பேருக்கு தோன்றினால் அதிஷ்டம். அதற்குமேல் தோன்றினால் தீபாவளி!!

பார்த்தீர்களா? எல்லாமே மனோத்துவ ரீதியான தந்திரம்தான்.

அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் ஒலிக்கும் இசை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது யோசித்துப் பாருங்கள். அந்த இதை மிகவும் மென்மையான, ஸ்லோ மியூசிக்காக இருந்திருக்கும்.

அதற்குக் காரணம் என்ன? எல்லா சூப்பர் மார்க்கெட்காரர்களுக்கும் வேகமான தடாங் படாங் இசை பிடிப்பதில்லையா? அப்படியல்ல.

விஷயம் என்னவென்றால், மனோதத்துவ அடிப்படையில் மென்மையான ஸ்லோவான இசை உங்களின் மனசை இலோசாக்குவதுடன், உங்களது இயங்கு திறனையும் குறைக்கின்றது.

நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் கார்ட் ஒன்றைத் தள்ளியபடி ஒவ்வொரு ஷெஃப்பாகப் போய் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகை ஸ்லோவான இசை உங்களது நடையையும் ஸ்லோவாக்கிவிடும்.


ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளியபடி அங்கு ஒலிக்கும் இசையைக் கேட்டபடி நடந்து பாருங்களேன்!



சாதாரணமாக நீங்கள் நடக்கும் வேகத்தில் சூப்பர் மார்க்கெட்டின் ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃப்பை நீங்கள் கடக்க எடுக்கும் நேரத்தைவிட, அதிக நேரம் எடுக்கப்போகின்றீர்கள். உங்களையறியாமல் அதிக நேரம் ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் போகின்றீர்கள். அதிக நேரம் பார்க்கும்போது, அவை அதிகநேரம் உங்கள் மனதில் பதியப் போகின்றன.

இந்த வேகக் குறைவால், வழக்கத்தைவிட ஓரிரு பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்குவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகின்றது. இல்லையா.


பிரிட்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்.



அதேபோல சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே சொக்லட், சூயிங்கம் போன்ற பொருட்கள் உள்ளே ஒரு இடத்தில் இருக்கும். அதே போருட்கள் நீங்கள் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு பணம்செலுத்த தயாராக கேஷியருக்கு முன்னால் நிற்கும்போதும் வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவா.


அதிலும் ஒரு சிறிய மனோதத்துவ தந்திரம் இருக்கின்றது.

அது என்னவென்றால், கேஷியரிடம் பணம் செலுத்த வருமுன்னர் நீங்கள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். எல்லாம் முடிந்து கேஷியருக்கு முன்னே வரும்போது அங்கே வரிசையாக ஆட்கள் பணம் செலுத்த நிற்பார்கள். நீங்களும் அந்த வரிசையில் போய் இணைந்து கொள்வீர்கள்.

ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் இருந்து எப்போதாவது தாவி இறங்கியிருக்கிறீர்களா? அப்படி இறங்கியிருந்தால், நீங்களும் பஸ் செல்லும் திசையில் சிறிது தூரம் ஓடித்தான் நிற்க முடியும் என்பது தெரிந்திருக்கும். இங்கு நடப்பதும் கிட்டத்தட்ட அதே ரிஃப்ளெக்ஷன்தான்.

கடந்த பல நிமிடங்களாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்கைள எடுத்து ஷாப்பிங் கார்ட்டுக்குள் போட்ட உங்கள் கைகள் கேஷியருக்கு முன்பு ஓரே இடத்தில் காத்திருக்கும்போது துறுதுறுக்கும். அப்போது நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து எட்டக்கூடிய தொலைவில் எதையாவது எடுக்கும்படி உங்கள் மனம் தூண்டும்.


கேஷியருக்கு அருகேயுள்ள ஷெல்ஃபில் இருக்கிறது உங்களுக்கான இரண்டாவது வலைவிரிப்பு!
ஆனால் எட்டக்கூடிய தொலைவில் இருக்கும் பொருள் விலையுயர்ந்த பொருளாக இருந்தால் நீங்கள் கைவைக்க மாட்டீர்கள். விலை அதிகமில்லாத நொறுக்குத்தீனி அருகே இருந்தால் அதிலும் ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள்.

அதைத் தவிர நீங்கள் குழந்தைகளுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தால், அவர்களை கேஷியருக்கு முன்னாலுள்ள வரிசையில் சில நிமிடங்கள் காத்திருக்க வைத்தபடி நிற்கையில், குழந்தைகளின் கண்களில் படும்படி சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தால் என்னாகும்?

அடுத்த தடவை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் கேஷியருக்கு முன்னால் நிற்கும்போது, அங்கே உங்களுக்கு முன்னால் நிற்பவர்களில் எத்தனைபேர் அருகிலிருக்கும் சிறு பொருட்களை வாங்குகிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். பத்தில் இரண்டு பேராவது வாங்குவார்கள்.

இவர்களில் யாரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தின்பண்டங்கள் விற்கும் பிரிவில் இதே பொருட்கள் இருந்தும், அங்கே எடுக்காமல் தவிர்த்துவிட்டு, கேஷியர்வரை வந்தவர்கள். கடைசிக் கிளைமாக்ஸில் மாட்டிக் கொண்டார்கள்.

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்களில் இவை ஒரு சிறு துளிதான். வேறு சில தந்திரங்களை அடுத்துவரும் வாரங்களில் இக் கட்டுரையின் 2ம் 3ம் பாகங்களில் பார்க்கலாம்.


***
thanks வி வி
***


"வாழ்க வளமுடன்"

சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்கள் – 1


இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.


உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் செயின்களை அமைத்திருக்கின்றன. இதைத்தவிர இந்திய வர்த்தகர்களும் அச்சு அசலாக மேலைநாட்டுப் பாணியில் சூப்பர் மார்க்கெட்களைத் திறந்திருக்கிறார்கள்.


அட்லான்டாவிலுள்ள (அமெரிக்கா) ஒரு சூப்பர் மார்க்கெட்
மொத்தத்தில் நீங்கள் வசிப்பது ஐரோப்பாவோ, வட அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றோ, சூப்பர் மார்க்கெட்கள் உங்கள் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகி விட்டது.

வட அமெரிக்காவில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை நீங்கள் செலவு செய்வது சூப்பர் மார்க்கெட்களில் என்கிறது கனேடிய பாவனையாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரம். இது ஒரு ஆவரேஜ் சதவீதம். ஐரோப்பாவிலும் மற்றய மேலை நாடுகளிலும் இருப்பதும் கிட்டத்தட்ட இதே ஆவரேஜ்தான். ஆசியாவில் வசித்தால் நீங்கள் செலவு செய்வது இதைவிடச் சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

இந்தக் கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவராக நீங்கள் இருந்தால், ஒரு காரியம் செய்யுங்கள். – அடுத்துவரும் 1 மாத காலத்திற்கு ஒவ்வொரு தடவையும் நீங்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், ரசீதுகளை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். 1 மாதம் முடிந்ததும் அவற்றிலுள்ள டாலர், யூரோ, அல்லது ரூபா பெறுமதியைக் கூட்டி வரும் தொகையை 12 ஆல் பெருக்குங்கள்.

வரும் விடை அல்லது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் தொகை ஆயிரக் கணக்கில் இருக்கும். உங்களுக்குத் தலைசுற்றும்.

இந்தத் தொகைதான் நீங்கள் வருடமொன்றுக்கு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்களுக்கு செலவு செய்யப்போகும் ஆவரேஜ் தொகை.

நான் ஏற்கனவே கூறியதுபோல இந்தத் தொகை ஆளாளுக்கு அல்லது வேறு வேறு குடும்பங்களுக்கு வேறுபடும். சிலருக்கு வருட வருமானத்தில் 30 சதவீதமாக இருக்கலாம். வேறு சிலருக்கு வருட வருமானத்தில் 20 சதவீதமாக இருக்கலாம். புள்ளிவிபரப்படி கனேடிய ஆவரேஜ் 25 சதவீதம்.


பிரான்சிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வைன் பிரிவு
“சரி. இதற்கு என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு அப்படி” என்று வழமைபோல செலவு செய்துகொண்டு இருப்பதானால், நீங்கள் இதைப் படிக்க வேண்டியது அவசியமல்ல. அவசியம் எங்கே வருகிறது என்றால், கனேடியப் புள்ளிவிபரம் கொடுக்கும் மற்றொரு தரவில்!

அந்தத் தரவு என்ன? மொத்த வருமானத்தின் 25 சதவிகித தொகையை சூப்பர் மார்க்கெட்டில் செலவு செய்யும் ஒரு குடும்பத்தில் செலவு செய்யும் முழுத்தொகையின் 80 சதவீதம்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி வேஸ்ட் ஆகப் போய்விடுகிறது. அடடா!

அதாவது நீங்கள் 5000 டாலருக்கு ஷாப்பிங் செய்திருந்தால் 4000 டாலருக்கு வாங்கும் பொருட்களைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மிகுதி 1000 டாலர் பெறுமதியான பொருட்களை வீணடிக்கிறீர்கள் அல்லது உபயோகிக்காமல் எறிகிறீர்கள். இதில் பத்து நாட்களுக்குமேல் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அழுகி எறியும் தக்காளி முதல், 2 வாரம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருந்த பாதிப் பாக்கட் பால் எக்ஸ்பயரி தேதி முடிந்து எறிவது வரை அடங்கும்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில¢லை. கனேடியப் புள்ளிவிபரத்தில் மேலும் ஒரு தரவு இருக்கிறது. அதன்படி, நீங்கள் செலவு செய்யும் தொகையின் 10 சதவீதம், நீங்கள் தேவையில்லாமல் வாங்கும் பொருட்களில் செலவாகின்றது. அதாவது வருடத்திற்கு 5000 டாலர் செலவு செய்தால், சுமார் 500 டாலர் பெறுமதியான பொருட்களை நீங்கள் தேவையில்லாமல் அல்லது அவசியமில்லாமல் வாங்குகிறீர்கள்.


ஜப்பானிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் டிஸ்பிளே ஸ்டைல்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தக் கணிப்பு சரி என்பது புரியும்.

மலிவாகப் போட்டிருக்கிறார்கள், அல்லது இந்த வாரம் மாத்திரம் இந்தப் பொருள் தள்ளுபடி விலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கப்படும் பொருட்கள் இந்த வகை. அதே நேரத்தில், புதிதாக அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களின் விளம்பரத்தால் கவரப்பட்டு வாங்கப்படும் பொருட்களும் இந்த வகையில் வரும்.

இந்த 10 சதவீத பொருட்களின் தள்ளுபடி விலை விளம்பரங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படாதிருந்திருந்தால், சூப்பர்மார்க்கெட்டில் இவை உங்களின் கைகளில் தட்டுப்பட்டிருக்காது. உங்கள் வீடுவரை வந்துமிருக்காது.

மேலேயுள்ள தரவுகள் இரண்டையும் கூட்டினால், சூப்பர் மார்க்கெட்களில் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் சுமார் 30 சதவீதத்தை வேஸ்ட் செய்கிறீர்கள். இது ஒருபுறம் இருக்க, மிகுதி 70 சதவீதம் செலவு செய்து நீங்கள் வாங்கிவரும் பொருட்களின் நிஜமான பெறுமதி அதுதானா? – அதை வேறுவிதமாகக் கேட்டால், நீங்கள் வாங்கிய பொருட்களை அதைவிட மலிவாக வாங்கியிருக்க முடியாதா?

நீங்கள் எந்தளவுக்கு ஷாப்பிங் புலி என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சராசாரி வட அமொரிக்கப் பாவனையாளர் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக வாங்கும் அதே பொருட்களை 15 சதவீதம் குறைவான விலையில் வாங்குவது சாத்தியம் என்கிறது அதே கனேடியப் புள்ளிவிபரம்.


கனடாவிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்புறத் தோற்றம். இதைச் சொல்வது ஃபிளெக்ஸ் ப்ரைசிங் என்று. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் இங்கு சொல்லப் போகின்றோம்.

நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்? இன்று? நேற்று? கடந்த வாரம்? அது எப்போதாக இருந்தாலும், அந்த சூப்பர் மார்க்கெட்டின் உட்புறத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.

வழமையாக சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும், அது எந்த நகரத்தில் இருந்தாலும், பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திராவிட்டால் நாங்கள் இப்போது சொல்லப்போகும் சில அம்சங்கள் நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

1) சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் ஆட்களில் அனேகமானவர்கள் வைத்திருக்கும் ஷாப்பிங் லிஸ்டில் இருக்கும் ஒரு அவசியப் பொருள் பால். இது நீங்கள் பயன்படுத்தும் பாலாகவோ, அல்லது குழந்தைகளுக்கான பாலாகவோ இருக்கலாம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தமது வருகையின் 70 சதவீதமான ட்ரிப்களில் பால் வாங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

அதை வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் 10 தடவைகள் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதில் 7 தடவைகள் உங்களது ஷாப்பிங் லிஸ்ட்டில் பால் இருக்கிறது. சரி. கேள்வி என்னவென்றால், இப்படி அதிகமானவர்களால் வாங்கப்படும் பால், ஏன் சூப்பர் மார்க்கெட்டின் வாயிலருகேயோ காஷியருக்கு அருகேயோ வைக்கப்பட்டிருப்பதில்லை?

2) அநேக சூப்பர் மார்க்கெட்களின் உள்ளே வாத்திய இசை ஒலிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ஒலிக்கும் இசை எந்த வகையான இசை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா. கவனித்திருந்தால் அதை இப்போது ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

3) நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட், சிப்ஸ், பாப்கார்ன் சூயிங்கம் போன்றவை உள்ளே ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதே பொருட்கள் நீங்கள் பணம் செலுத்தும் கேஷியருக்கு அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்திருப்பீர்கள். ஒரே பொருட்கள் ஏன் இரண்டு வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


பிரிட்டனிலுள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் செயின்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக சூப்பர் மார்க்கெட்களில் அமைந்து விடுவதல்ல. இவை காரணமாக அமைக்கப்பட்டடிருப்பவை. காரணம் -சைக்காலஜி. மனோத்ததுவம். மனோதத்துவ ரீதியாக உங்களை மடக்குவதுதான் திட்டம்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.

முதலாவதாகக் கூறப்பட்ட பால் விவகாரத்தையே பாருங்கள். சூப்பர் மார்க்கெட்கள் பாவனையாளர்களின் வசதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதானால், கடைக்குள் நீங்கள் நுழைந்தவுடன் கையில் எடுக்கும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சூப்பர் மார்க்கெட்டுக்கு நீங்கள் 10 தடவைகள் சென்றால், 7 தடவைகள் பால் வாங்கச் செல்கிறீர்கள்.


***
thanks viruvirup
***





"வாழ்க வளமுடன்"


மூலி [முள்ளங்கி] பராட்டா




தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு: மூன்று கப்.
முள்ளங்கி - தோல் சீவி துருவியது: ஒரு கப்.
இஞ்சி - தோல் சீவி துருவியது - இரண்டு ஸ்பூன்.
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு.
மிளகாப்பொடி: அரை ஸ்பூன்.
தனியாப்பொடி: ஒரு ஸ்பூன்.
மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை.
கரம் மசாலா: அரை ஸ்பூன்.
உப்பு: தேவையான அளவு.
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.

*

செய்முறை:

கோதுமை மாவில் தண்ணீர் மற்றும் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய முள்ளங்கியை நன்றாக பிழியவும். பிழிந்த சாற்றினை கொட்டி விடவும். முள்ளங்கியில் தண்ணீர் அதிகம் இருந்தால் பராட்டா நன்றாக இட வராது. சில பேருக்கு நெஞ்சு கரிக்கலாம். பிழிந்த முள்ளங்கி துருவலில், இஞ்சி துருவல், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக [ஒரு சிறிய எலுமிச்சை அளவு] உருட்டி வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும். அதன் மேல் ஒரு முள்ளங்கி உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராத படி மெதுவாக இடவும்.

இப்படி செய்த பராட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும்.

இந்த முள்ளங்கி பராட்டாவிற்கு - காய்கறி ஊறுகாய் மற்றும் தயிர் நல்ல சைடு டிஷ்.


***
thanks வெங்கட் நாகராஜ்
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "