...

"வாழ்க வளமுடன்"

26 மே, 2011

குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்...



ஒவ்வொரு தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல் வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும். ஏனெனில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான் ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது. அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு தெரிவிக்கிறது.


யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம் எனக் கூறுகிறது. மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான செயலாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு உண்டாவதும் சகஜம்தான்.

குழந்தை ஏதாவது வேண்டாத பொருளை விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு. அதன் பின் தாய் காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம் கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம், சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை சில சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும். உணவில் மாற்றமோ, உணவு கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும். இது குறைந்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும். அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும்.

குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். இதனால் உணவு எளிதில் சீரணமாகும்.

அதுபோல் அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உணவை செரிமானமாகாமல் தடுத்து மலச்சிக்கலை உண்டாக்கும்.

சில சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும். பின்தான் அதனை விழுங்கும். இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில் வைக்கக்கூடாது. வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும். எனவே, பயத்தை வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை பார்க்கச் செய்யக்கூடாது.


***
thanks நக்கீரன்
***



"வாழ்க வளமுடன்"

வாத பித்த கப உடற்கூறும் சர்க்கரை நோயும் !!!


இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று.


எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது.
உலக அளவில் 246 மில்லியன் மக்கள் தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்னும் 5 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 500 மில்லியனாக மாற வாய்ப்புள்ளது என உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.

உணவு மாறுபாடு, மனக்கவலை, எப்போதும் தீரா சிந்தனை, அதிவேகம், காலத்தின் கட்டாயச் சூழ்நிலையில் நிம்மதியற்ற வாழ்க்கை. நேரம் தவறிய உணவு, அதிக மனஉளைச்சல் இவைகளினாலும் பரம்பரையாகவும் இவற்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ இருந்தால்கூட சர்க்கரை நோய் ஏற்படலாம்.


பொதுவாக உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் போது உடலானது தன் நிலையிழந்து, உண்ட உணவு செரிக்காமல் அதிக கொழுப்பு தன்மையடைந்து, அது அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கிறது. இந்த இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மாற்றும் கணைய நீர் அதிகம் சுரக்க வேண்டியுள்ளது. இதனால் கணையம் பாதிக்கப்பட்டு கணைய நீர் குறையும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.


பொதுவாக உண்ட உணவில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் குளுக்கோஸ் மூன்று பங்காக பிரிக்கப்படுகிறது. ஒரு பங்கு இரத்தத்திலும், ஒரு பங்கு நீராகவும், ஒரு பங்கு ஆவியாகவும் வெளியேறுகிறது. இதில் நீராகவும், ஆவியாகவும் அதாவது சிறுநீரின் மூலமும், வியர்வை மூலமும் வெளியேறாமல் இரத்தத்தில் அதிகளவு கலந்துவிடுகிறது.


கொழுப்பு தன்மை உடலின் பிற உறுப்புகளையும் பாதிப்படையச் செய்வதுடன் உடல் தன் நிலை மாறி, உறுப்புகளின் இயக்கத்தையும் குறைத்துவிடுகிறது. இதனால் உடல் அசதியுண்டாகி கை, கால் மூட்டுகளிலும், கணுக்காலிலும் வலுவிழந்து இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. மேலும் பாதங்களில் புண், புரை ஏற்படுகிறது. சில சமயங்களில் கால் பகுதிகளில் சருமத்தின் நிறம் முதலில் சிவந்து பின் வீங்கி கருத்தும் போகிறது. புண், புரைகள் எளிதில் ஆறுவதில்லை. காரணம் இரத்தத்ததில் உள்ள அதிகளவு சர்க்கரை புண்ணை ஆற விடுவதில்லை.


பொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவ தில்லை. சித்தர்களின் கூற்றுப்படி, வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களின் அமைப்பில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு பாதிப்பையும் குறி குணங்களையும் காட்டுகிறது.


வாத, பித்த, கபம் (சூலை) உடற்கூறு கொண்டவர்களை நீரிழிவு நோய் தாக்கினால் உண்டாகும் குறி குணங்களையும், பாதிப்புகளையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

*

வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு

வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், நரம்புகள் வலுவிழந்து உடல் பலமிழக்கும். மேலும் காலில் வலி உண்டாகும். மூட்டுக்குக் கீழ் கால்பாதம், நகம், கெண்டை சதைப் பகுதிகள் இறுகி காய்ந்து உலர்ந்ததுபோல் தோற்றமளிக்கும். மலம் கறுத்து வெளியேறும். நகக் கண்கள் கறுத்துப் போகும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தால், மூட்டு இறுகி கணுக் கால்களில் சிறிது வீக்கத்துடன் வலியை உண்டுபண்ணும். இதுபோல் இடுப்புப் பகுதி, தொடையின் ததைப்பகுதி இறுகி காணப் படும்.


இவர்களுக்கு கால் நகக்கண்ணிலும், விரல் இடுக்குகளிலும் வட்டமாக தோன்றி இவை புண்ணாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். மேலும் காலில் அதிக புண், புரை உண்டாகும். இவை எளிதில் ஆறுவதில்லை. கை, கால்கள் மரத்துப் போகும். காலையில் கால்களில் அதிக வலி உண்டாகும். பாதங்களை தரையில் ஊன்றி நடக்க முடியாது.

*

பித்தக் கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு

பித்தக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு நீரிழிவு பாதித்தால், கண் நரம்புகள் பாதிப்படைந்து கண் பார்வை குறைபாடு வர வாய்ப்புள்ளது. நேரம் தவறி உண்பதால் மயக்கம் ஏற்படும். உடலில் ஒருவித எரிச்சர் தோன்றும். இதய படபடப்பு ஏற்பட்டு, திடீர் மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும்.

கால் பகுதிகளில் நீர் கோர்த்து, தோல் பளபளப்படையும். நடந்தால் மூச்சுத் திணறல் உண்டாகும். முகம் வெளிறிக் காணப்படும். சளியுடன் கூடிய நெஞ்சிரைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் அதிகமாக இரத்தக் குழாய்களில் அடைப்புகள் வர வாய்ப்புள்ளது. அதுபோல், ரத்தத்தில் பித்த நீர் அதிகம் சேர்ந்து ரத்தத்திலுள்ள யூரியா, கொழுப்பு, சர்க்கரை மூன்றும் சேர்ந்து ரத்தத்தை பசைபோய் ஆக்கிவிடும்.

இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி நெஞ்சு படபடப்பு, நெஞ்சுச் சளி போன்றவை உண்டாகும். கை கால் வெளுத்துக் காணப்படும். மதியம் அல்லது மாலை வேளையில் கை கால்களில் அதிக வலி உண்டாகும்.

*

கபக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு

சர்க்கரையின் பாதிப்பால் கை, கால், கழுத்து, இடுப்பு, தோள்பட்டை, முதுகு போன்றவற்றில் வலியை உண்டு பண்ணும்.
குடலின் சீரணத் தன்மையைக் குறைத்து குடல் பகுதிகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.


இடுப்புக்குக் கீழ் தொடை, முழங்கால் வீக்கம் உண்டாகி அதிக வலி ஏற்படும். அதோடு கால் பாதங்களில் மதமதவென ஈரத்தோடு காணப்படும். பாதம் பஞ்சுபோல் மாறிவிடும்.

இவர்களுக்கு சிறுநீரகம் எளிதில் பாதிப்படைய அதிக வாய்ப்புண்டு. காரணம், ரத்தத்தில் உப்பு நீர் அதிகமாக இருக்கும். அதனால் தசைகளிலும், நரம்பு முடிச்சுகளிலும் மூட்டுகளிலும் வீக்கம் இருக்கும். பெரும்பாலும் இவர்கள் உடல் அதிக பருமனாக மாற வாய்ப்புண்டு.


உடம்பில் எரிச்சல் இருந்தாலும் தசைகள் குளிர்ந்து அதாவது சூடு கலந்து குளிர்ச்சியாக காணப்படும். இவர்களுக்கு வயிற்றில் அதிகம் நீர் சேர வாய்ப்புள்ளது. இதனால் வயிறு பெருத்துக் காணப்படும். கால்கள் இரவு நேரங்களில் வீக்கத்துடன் அதிக வலி இருக்கும்.

*

பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்.

முதல்வகை - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது.


இரண்டாம் வகை - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் சிலருக்கு உண்டாகும்.
நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகிறது.


தற்போது தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு ரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப் படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.


இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.



இதில் உடலைக் கெடுக்கும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு வேகமாக இருக்கும். பித்த உடற்கூறு கொண்டவர்கள் பகலில் பித்த அதிகரிப்பின் போது மது அருந்தினால் மயக்கம், வாந்தி, பிதற்றல் நிலை ஏற்படுவ துடன் மதுவில் உள்ள ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து பரவுவதால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.



இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன.



இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது.
மனிதனின் உடற்கூறுகளை மாற்ற முடியாது. ஆனால் சர்க்கரை நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.



நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு உணவில் காரத்தை குறைக்க வேண்டும்.



அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது.
மன உளைச்சல், மன எரிச்சல், கோபம், பதற்றம் இவற்றைத் தணிக்க தியானமே சிறந்த வழியாகும். தியானம், யோகா இரண்டும் சித்தர்கள் அருளியதுதான்.


தியான நிலையில் சரசுவாசத்தை மேற்கொண்டால் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.


மன அமைதி, தியானம், சீரான உணவு, இவை மூன்றும் ஆரோக்கியத்திற்கு அற்புத மருந்தாகும். பொதுவாக சர்க்கரை நோய் நரம்புகள், தசைகளை பாதிக்க ஆரம்பிக்கும். உடல் உறுப்புகளின் அசைவுகளை மந்தப்படுத்தும். இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைப்பட்டு நரம்பு முடிச்சுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் நல்ல மூலிகை தைலங்களை தேய்த்துக் குளிப்பது நல்லது.


குறிப்பாக இடுப்புக்குக் கீழ் கால், தொடை, மூட்டு, கெண்டைச்சதை, நகக்கண்களில் தைலங்களை நன்கு தேய்த்து ஊறவிடவேண்டும். அப்போது தசைகளில் உள்ள உப்பு நீர் எண்ணெயுடன் கலந்து வெளியேறிவிடும். இதனால் தசைகள் சுத்தமடைந்து நன்கு இயங்கும். உடலில் உப்புநீர் குறைவதால், கால்பகுதிகளில் உண்டாகும் புண் புரைகள் விரைவில் ஆறும்.


நீரிழிவு நோய்க்கு சித்தர்கள் பல பரிகார முறைகளைக் கூறியுள்ளனர். இதில் அகத்தியர் வர்ம சூத்திரத்தில் கூறியுள்ள தைல முறையைத் தெரிந்துகொள்வோம்

தைலம் தயாரிக்கும் முறை -

கடைமருந்து -
கருஞ்சீரகம் - 25 கிராம்
கார்கோல் - 25 கிராம்
கொட்டம் - 25 கிராம்
தேவதாறு - 25 கிராம்
இராமிச்சம் - 25 கிராம்
சந்தனம் - 25 கிராம்
வசம்பு - 25 கிராம்
குறுந்தொட்டி - 25 கிராம்
மஞ்சள் - 10 கிராம்


இவற்றை எடுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு.


பச்சிலை மருந்து
குப்பைமேனி - 100 மிலி சாறு
தைவேளை - 100 மிலி சாறு
வேலிப்பருத்தி - 100 மிலி சாறு
கோவை - 100 மிலி சாறு
அமிர்தவல்லி - 100 மிலி சாறு
அருகம்புல் - 100 மிலி சாறு
வெற்றிலை - 100 மிலி சாறு
கறிவேப்பிலை - 100 மிலி சாறு
இவற்றுடன்
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
நல்லெண்ணெய் - 1 லிட்டர்
கடுகு எண்ணெய் - 1 லிட்டர்

எடுத்து, முதலில் சாறுகளை லேசாக கொதிக்க வைத்து, கொதிநிலையில் எண்ணெயை சிறிது சிறிதாக விட்டு, பின் மேற்கண்ட கடை மருந்துகளை சேர்த்து மணல் பக்குவமாக வரும்போது எடுத்து வடிகட்டி, பாட்டிலில் அடைத்து தினமும் கால், கை களில் தடவினால், கைகால் எரிச்சல், நமைச்சல் நீங்கும். மறத்துப்போகும் தன்மை மாறும். சருமத்தின் ஏற்படும் வெளுப்பு நீங்கும். புண் புரைகள் நீங்கும்.



***
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
***



"வாழ்க வளமுடன்"

அவரைக்காய் !!!


இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.


ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.


இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.


ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.


அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.


அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.


அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.


நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.


காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.


சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி

-தேரையர் குணபாடம்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.


அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.


அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.


· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.

· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

· சிறுநீரைப் பெருக்கும்

· சளி, இருமலைப் போக்கும்

· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்

· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்

· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.


***
thanks நக்கீரன்
***





"வாழ்க வளமுடன்"

பித்தம் தணிக்கும் கொத்தமல்லி !!!



உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.


மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.


கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.


கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.


பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.


நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.


இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.


கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் -

சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.

*

கொத்தமல்லியின் பயன்கள்


· சுவையின்மை நீங்கும்.

· வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

· செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.

· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.
மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

· புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

· கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.

· சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.


· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும்.

· உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


· வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு

எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்
கொத்தமல்லி - 300 கிராம்
சீரகம் - 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்

இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.
இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.


***
thanks அசோக்.S
***





"வாழ்க வளமுடன்"

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid)


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.


அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.


தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.


சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.


தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.


*

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல:

மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.



*


தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

*

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.


வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.


மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.


தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

*

தைலங்கள்:

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

*

எளிதில் ஜீரணமாகும் :

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

*

வயிற்றுப்புண்கள் :

தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.


தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?
மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

*

வைரஸ் எதிர்ப்பு:

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

*

ஆண்மைப் பெருக்கி :

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக..... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

*

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.


இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்



***
thanks அசோக்.S
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "