...

"வாழ்க வளமுடன்"

24 ஜூன், 2011

கோபத்தோடு சாப்பிடாதீங்க! உடலுக்கு கேடு…


சிலர், அரக்கபரக்க சாப்பிடுவர் தினமும்! கேட்டால், “காலை எழுந்ததும் ஏகப்பட்ட வேலைகள்; இதில், சாப்பிட நேரம் இருக்கா…என்ன?’ என்று அலுத்துக் கொள்வர். இப்படி சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. திட்டமிடப்படாமல் செயல்படுவதால் தான் இப்படி நேர்கிறது. தினமும் காலை படுக்கையில் இருந்து எழுகிறோம்; காலையில் சிற்றுண்டி முதல் இரவு டின்னர் வரை நேரம் குறித்து சாப்பிட்டலாம். என்ன தான், “டென்ஷன்’ இருந் தாலும், சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்பு தேவை.

பிசினசில் இருப்பவராக இருந்தாலும், ஊர் விட்டு ஊர் போகும் வேலை செய்பவராக இருந்தாலும், சாப்பிடுவதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. அதிலும், நம் கோபதாபங்களை எல் லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம் உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் டாக்டர்கள்.உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள்! அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது.

அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும்.அமெரிக்க நிபுணர்கள், சமீபத்தில், 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் சர்வே நடத்தினர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.விருந்துகளில் சிலர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம்


***
thanks nithus
***






"வாழ்க வளமுடன்"

நாம் சரியாக கைகழுவ வேண்டும் !!!



“சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறது பழமொழி.

செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான்.

இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.



இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டுற்குள் நுழைவார்கள். ஆனால் இந்த பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.

நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம். இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு அதாவது 2009 அக்டோபர் 15 அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 5000 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கை கழுவுவதன் பயன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுபோல் தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.



இந்த கை கழுவும் முறையை சரியாக பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும் நாடுகள்தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.



இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.



பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.




எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்

· காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.



· மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.



· எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.



· வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.



· குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும்.



இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.



· கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.



· அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.



· கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.



***
thanks nithus
***







"வாழ்க வளமுடன்"

குடும்பம், குழந்தை, வேலை…



தனது கைக்குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் தாய். குழந்தை எப்படியோ குப்புறப் படுத்துக் கொண்டது. தலையை நிமிர்த்த வலுவற்ற பச்சைக் குழந்தை அது. மூக்கு கட்டிலோடு ஒட்டிக் கொள்ள மூச்சுத் திணறி தவித்து, கடைசியில் தாய் வரும் முன் இறந்தே போனது அந்தக் குழந்தை. இது குவைத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

தனியே குழந்தையுடன் வாழும் தாயின் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பு எனலாம். எப்போதும் குழந்தையின் மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தனியே செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். இப்படி நாலா பக்கமும் ஓடும் தாய்மார்களின் கஷ்டம் சொல்லி மாளாது.

வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிப்பதென்றால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையை ஓட்ட பணத்துக்கு எங்கே போவது ? “ஒருத்தர் மட்டும் வேலைக்கு போனா வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரெண்டு பேருமே வேலைக்கு போனா தான் சமாளிக்க முடியும்”. என மக்கள் குடும்பம் குடும்பமாக ஓடும் காலமல்லவா இது.

இத்தகைய அன்னையரின் முதல் சவால் இரண்டு குதிரைகளில் பயணிப்பது. இரண்டு வேறு திசைகளில் பயணிக்கும் குதிரைகளென்றால் என்ன செய்வது ? வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். குழந்தையை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் எனும் கவலை மறு புறம்.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குப் போவதே அன்னைக்கு மிகவும் கடினம். வீட்டிலும் விட முடியாதபடி சிறிய குழந்தையெனில் சொல்லவே வேண்டாம். ஒரு நல்ல “டே கேர்” செண்டரைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் கேட்கும் மாதக் கட்டணம் இப்போதெல்லாம் இதயத்தை இரண்டு வினாடி நிறுத்திவிட்டுத் தான் துடிக்க வைக்கிறது. டே கேர் செண்டர்களின் கவனிப்புக்கும், அன்னையின் கவனிப்புக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு விஷயம்.

பாட்டி, தாத்தா, அப்பா என சந்தோசமான சூழலில் வளர வேண்டிய குழந்தை “காப்பகங்களில்” தனியே இருக்கும் போது ரொம்பவே சோர்ந்து விடுகிறது. இந்த மன மாற்றம் குழந்தையாய் இருக்கும் போது அதிகம் தெரிய வராது. வளர வளர குழந்தையின் குணாதிசயங்களில் வித்தியாசம் பளிச் என புலப்படும்.

அன்னையின் நிலமை சொல்லவே வேண்டாம். “மழலையின் விரல் விலக்கி அலுவலகம் விரையும் பொழுதுகள்” ரொம்பவே வருத்தமானது. அது வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு மட்டுமே புரிந்த சங்கதி. பெண்களின் மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமே இது தான்.

அத்துடன் சிக்கல் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. டேகேர் செண்டர்களும் இத்தனை மணி முதல், இத்தனை மணி வரை என இயங்குகின்றன. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் செய்யக்கூடிய வேலையைத் தான் தேட வேண்டும் எனும் கட்டாயம் பெண்ணுக்கு ! பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில், அருகிலேயே உள்ள ஏதோ ஒரு அலுவலகத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே வழக்கமாகி விடும்.

பாலூட்டும் அன்னையருக்கு பிரச்சினை இன்னும் அதிகம். குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அலுவலகம் செல்லவேண்டுமென பெரும்பாலான நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கும். சிறிய குழந்தையை சரியாகப் பராமரிக்க அன்னையையோ, பாட்டியையோ தவிர யாரால் முடியும் ? ஆனால் என்ன செய்வது ? பராமரிப்பு நிலையங்களைத் தான் நாடவேண்டும். பாலூட்டாமல் அன்னையும், குடிக்காமல் குழந்தையும் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களும் உஷாராக நிலமையைக் கவனிக்கும். இந்த வேலை உங்களுக்கு மிக முக்கியம், “வேலையை விட்டு நீங்கள் நிற்கப் போவதில்லை” என தெரிந்தால் அவ்வளவு தான். ஒரு அடிமை போல நடத்த ஆரம்பித்துவிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியது தான். கிடைக்கும் சம்பளமாவது கிடைக்கட்டும் எனும் மன நிலைக்குப் பெண்களைத் தள்ளி விட்டு நிறுவனங்கள் அமைதியாய் இருந்து விடும்.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் வாழும் பெண்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் பலர் உண்டு. பெரும்பாலும் அலுவலக சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ நண்பர்கள் எனும் போர்வையில் நெருங்குவார்கள். பாச பேச்சுகளோ, ஜெண்டில் மேன் தோரணையோ இவர்கள் உரையாடல்களில் தெறிக்கும். கடைசியில் எல்லாம் பாலியல் தேடல்களாய் முடிந்து விடும்.

வெளியூர் பயணங்கள் போன்றவையெல்லாம் தனியே குழந்தையைக் கவனிக்கும் பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இதனால் மற்றவர்களை விட அதிக திறமை இருந்தாலும் கூட வேலையில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. பெரும்பான்மையான இலட்சியங்களும், கனவுகளும் முடங்கி விடுகின்றன. இதனால் வேலையில் திருப்தியின்மையே பெரும்பாலும் இத்தகைய அன்னையரை ஆட்டிப் படைக்கிறது.

கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தன்னந்தனியாய் தாயிடம் குழந்தை வளரும் போது வேறு பல சிக்கல்களும் வந்து சேர்கின்றன. மன அழுத்தமும், தன்னம்பிக்கைக் குறைபாடும் குழந்தைகளிடம் வர இது காரணமாகிவிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதோ, தோல்விகளை அதிகமாய் சந்திப்பதோ சகஜம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வீட்டு வேலை, அலுவலக வேலை, கூடுதல் பொறுப்புணர்வு, ஆதரவு இன்மை இவையெல்லாம் அன்னையரை பிடிக்கும் சிக்கல்களில் சில என்கிறது அந்த ஆய்வு.

இங்கிலாந்தின் சில்ட்ரன்ஸ் சொசைடி வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதையே பிரதிபலிக்கிறது. தனியே வாழ்பவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, மன அழுத்தம், நல்ல பழக்கமின்மை என தடுமாறுகிறார்களாம்.

அலுவலக நேரத்தில் வீட்டின் தேவைகள் நினைவில் புரள்வதும், வீட்டு நேரத்தில் அலுவலக பயம் வருவதும் என இந்த தனிமைப் பெண்களின் மன அழுத்தம் அளவிட முடியாதது. என்கிறது இன்னொரு ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சிக்கல் மிகவும் அதிகம். மண முறிவு, குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை இவையெல்லாம் பெண்களை தனியே வாழ வைத்து விடுகின்றன. சுமார் 27 விழுக்காடு குழந்தைகள் தாயிடம் வசிப்பவர்கள் தானாம். இந்த குடும்பங்களில் 40 சதவீதம் வறுமையில் வாடுவதாய் சொல்கிறது அந்த ஆய்வு.

பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சிக்கல் எழுவதில்லை. வசதி படைத்த வீடுகளில் வளரும் பிள்ளைகள் நல்ல உயர் நிலையை அடைவார்கள் என்கிறார் இங்கிலாந்தின் மனநல பேராசிரியர் மைக்கேல் லேம்ப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதை நிரூபித்திருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்குத் தான் அதிக சிக்கல். குறைந்த வாடகையில் வீடு, குறைந்த விலையில் பொருட்கள் என பணமே இவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை முடிவு செய்கிறது. இந்த போராட்டங்களின் விளைவாக, சுமார் 76 விழுக்காடு தாய்மார்கள் தேவையான 8 மணி நேர தூக்கத்தைப் பெறுவதேயில்லை என்கிறது மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்று.

இப்படியெல்லாம் கஷ்டத்தில் அல்லாடும் பெண்களுக்கு சமூகம் கை கொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பும், அங்கீகாரங்களும் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கிறது.

பெண்களால் குழந்தைகளைத் தனியே வளர்க்க முடியாது என்பதெல்லாம் சும்மா என்கிறது அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு. தனியே வாழ்க்கையை நடத்தும் பெண்கள் குழந்தைகளை வெற்றிகரமான வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லமுடியும் என அடித்துச் சொல்கிறது இது. ஆனால் அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை !

அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !



***
thanks சேவியர்
***




"வாழ்க வளமுடன்"

கணுக்கால் வலி தீர தீர்வு இதோ :)



தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.


மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.


கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.


கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:

வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.

அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.

பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.

உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.

மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.

முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.



கணுக்கால் வலி வருமுன் காக்க:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.

கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.

மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.

வசம்பு 5 கிராம்
மஞ்சள் 5 கிராம்
சுக்கு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்

எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

எருக்கின் பழுத்த இலை 5
வசம்பு 5 கிராம்

இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்



***
thanks nithus
***




"வாழ்க வளமுடன்"

உறுதியான உடலை பெற… ஈஸி டிப்ஸ்!



ஆரோக்கியமான உணவை மட்டும் நாம் எப்போதும் சாப்பிட்டு வர வேண்டும். தேவைக்கேற்பவோ அல்லது ருசிக்காகவோ கூட பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக்கூடாது.

உடற்தகுதிக்குரிய உடற்பயிற்சிகளை தவறாமல் தினமும் செய்து வர வேண்டும். குறிப்பாக சிட் அப்ஸ் எனப்படும் உட்கார்ந்து எழுந்திருக்கும் பயிற்சியை தினமும் கட்டாயம் செய்ய வேண்டும்.

உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும். தினமும் ஒரு நிமிடமாவது, நாம் செய்யும் வேலைகளில் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்கிறோமோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதயத் தசைகளை வலுவடையச் செய்யும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைத்து விடலாம். இதுவே உடலைக் கட்டுமஸ்தாக ஆக்குவதற்குரிய சிறந்த முறையாகும்.

கொழுப்பைக் குறைப்பதற்காக தேவையற்ற வழிமுறைகளில் வீணாகச் செலவு செய்ய வேண்டாம். சிறப்பு வகை டானிக் போன்ற மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிய தேவையில்லை.

கொழுப்பைக் குறைத்து உடலை வாளிப்பாக மாற்றும் என்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தேவையற்ற பொருட்களை வாங்கி உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை தகுந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் தினமும் செய்து வந்தாலே போதும். நீங்களும் சிக்ஸ் பேக்-அப் உடம்பை பெறலாம்


***
thanks luxinfonew
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "