...

"வாழ்க வளமுடன்"

25 ஜூலை, 2011

அன்பே பிரதானம் அதுவே வாழ்க்கையின் அஸ்திவாரம்....




“அன்பிருந்தால் துன்பமில்லை” புனிதர் அகஸ்டின் சொல்லும் உபதேசம் இது. `உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ என்பார் ஓஷோ. அது நிஜம்தான். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். பலர் கொலை செய்யப்படுகிறார்கள். அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.



***

யாரிடமோ நீங்கள் சதா இணைந்திருப்பதுதான் அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். துன்பமான நேரத்தில் மட்டும் ஒருவருடன் இணைந்தால் அவருக்கு நீங்கள் உதவுவதாகக் கொள்ளலாம். உதவுவதால் துன்பத்தைப் போக்கலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். மற்றவருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.



***


தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க 7 பண்புகள் தேவை என்கிறார் ஜான்கிரே. அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்றவை அந்த பண்புகளாகும். ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.



***



அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.



***


அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.



***



புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.



***


பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.



***


ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும்.



***



கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

***

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். புரிந்து கொள்ளல், பணிவு, பொறுப்பு, உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.




***
thanks vayal
***






"வாழ்க வளமுடன்"

பூச்சிகளற்ற சமையல் அறை- 10 வழிகளில்




மற்ற உயிரினங்களை போல , பூச்சிகளும் தாங்கள் உயிர்வாழ ஏதுவாக, உணவின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் பாங்குடையவை. ஆகையால், பூச்சிகள் வந்த பின்பு அவற்றை ஒழிப்பதைப் பற்றி சிந்திப்பதை விட, அவை வரும் முன்னரே அதற்குண்டான ஆயத்தங்கள் செய்வது ஒரு நல்ல உத்தி ஆகும்.




உங்கள் சமையல் அறையிலிருந்து பூச்சிகளை அகற்ற கீழ்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றலாம் :



1) தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தப்படுத்துவது நல்லது.



2) உபயோகித்த பாத்திரங்களை இரவு முழுதும் "சிங்கில்" போட்டு வைக்க வேண்டாம். முடிந்தவரை, அவைகளை இரவிலேயே கழுவி வைத்துவிடுங்கள்.



3) உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி வையுங்கள். பழைய செய்திதாள்கள், அட்டைபெட்டிகள் மற்றும் காகிதப்பைகளை நீண்ட நாள் வைத்திருப்பதை தவிர்க்கவும்.



4) சமையல் அறையின் அலமாரிகளில் காணப்படும் விரிசல்களை நன்கு அடைத்துவைக்கவேண்டும்.




5) உணவு பொருளையோ, குப்பைகளையோ, திறந்து வைக்காதீர்கள், உயிர் பிழைக்க உணவின்றி தவிக்கும் பூச்சிகள் தாமாகவே நம் வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.




6) மாவு, ஊறுகாய், மற்றும் பருப்பு வகைகளை, நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால், அவற்றில் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு இராது.



7) பூச்சிகளின் இயல்பு உணவிடம் தேடி செல்வதுதான். ஆகையால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்குள் பூச்சிகளின் வருகை இருக்காது.




8) வாரம் ஒரு முறை உங்கள் வீட்டை சோப்பு பயன்படுத்தி கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால், தேவை இல்லாத பூச்சிகளின் தொல்லை இன்றி இருக்கலாம்.




9) ஒரு பஞ்சு உருண்டையை "பெப்பர்மின்ட் எண்ணை" யில் முக்கி எலிகள் வருமிடத்தில் வைத்தால், அவற்றின் வாசனையில், எலிகள் நெருங்காது.




10) "சில்வர்ஃபிஷ்"




"சில்வர்ஃபிஷ்" எனும் இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, அடித்தளங்கள், சமையல் அறை, புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் "லெப்பிஸ்மா சக்காரினா" ஆகும்.




மீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் "சில்வர்ஃபிஷ்" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் "கார்போஹைட்ரேட்டை" உணவாக அருந்தும்.



இவைகள் ஈரப்பதம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப்பெருகும். 75% முதல் 95% சதவிகிதம் ஈரப்பதம் இவை வளர சாதகமான ஒன்றாகும். 1/2 (அ) 1 இன்ச் அளவுகொண்ட "சில்வர்ஃபிஷ்" பூச்சிகள் உலர்ந்த உணவுகள், பசைத்தன்மை மிகுந்து காணப்படும் புத்தகங்கள், சுவரொட்டிகள் போன்ற இடங்களில் உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும்.



பருத்தி, பட்டு, "ஸின்தெட்டிக்" துணிகளையும் இவை அரித்துவிடும். இவ்வாறு வீட்டின் பொருள்களையும், உணவுகளையும் கபளீகரம் செய்வதால் "சில்வர்ஃபிஷ்" இல்லங்களில் கேடு விளைவிக்கும் பூச்சி வகையாக கருதப்படுகின்றன.




"சில்வர்ஃபிஷ்ஷை" ஒழிக்க சில வழிகள்


1) இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.



2) பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.



3) "சில்வர்ஃபிஷ்" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது "டையாட்டம் மண்" தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.




4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது "ப்லாஸ்டிக் டேப்பை" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், "சில்வர்ஃபிஷ்" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.



5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது "டால்கம்" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக இருக்கும்.




6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.




7) துணி அலமாரிகள் மற்றும் "சிங்க்கில்" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.




8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.




இது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்........





***
thanks யாழினி
***




"வாழ்க வளமுடன்"

உடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்



'வலியில்லாமல் வழியில்லை' என்று உடற்பயிற்சியை குறிக்கும் சில சான்றோர் மொழிகள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து விட்டாலும் சில தவறான நம்பிக்கைகள் இன்றளவும் உலவுகின்றன என்றால் மிகை ஆகாது. வாருங்கள், உடற்பயிற்சியை சுற்றி இருக்கும் சில அசாதாரண உண்மைகளையும் தவறான நம்பிக்கைகளையும் சற்று அலசுவோம்.



உடற்பயிற்சி - இது நம்பிக்கை என்றால் எது நிஜம் :



நம்பிக்கை #1 : எடை இழக்க விருந்தை தவிர்க்க வேண்டும்


நிஜம் : உங்கள் அன்றாட உணவில் இருந்து சிலவைகளை நீக்குதல் என்பது உங்களை அதன் பால் மேலும் ஆசை கொள்ளச் செய்யும். இதன் விளைவாக நாம் சபலப் பட்டு அருந்தும் உணவால் எடை இழப்பதற்கு பதிலாக எடை கூட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. ஆகையால், அவ்வப்போது விருந்துகள் சுவைப்பது தவறாகாது. அதன் பிற்பாடு சமச்சீரான உணவு முறை மேற்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.






நம்பிக்கை #2
: தண்ணீர் அதிகம் அருந்துவதால் உடல் எடை கூடி விடும்.


நிஜம் : இயற்கையான தண்ணீரில் காலோரிகள் இல்லததால் அது கொழுப்புச் சத்தாக மாறாது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், தண்ணீர் நம் உடற்கொழுப்பை கரைக்கக் கூடியது. மேலும், நம் உடல் சீராக இயங்க தண்ணீர் அத்தியாவசியமாக தேவை.


தண்ணீரிற்கும் உடல் எடைக்கும் எந்த விதமான நேரடி தொடர்பும் கிடையாது. தண்ணீர் அருந்தியவுடன் உடலில் அது தங்குவதால் தர்க்க ரீதியாக சிலமணி நேரம் உடல் எடை கூடும் என்பது மெய்யானாலும், உடலை விட்டு வெளியேறும் நீரின் மூலம் கொழுப்பு கரைகிறது. இன்னுமா தண்ணீர் உங்கள் எதிரி ??






நம்பிக்கை #3 : உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சுவைப்பதை தவிர்க்க வேண்டும்


நிஜம் : இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. உணவிற்கு இடையில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பது உடலின் சர்க்கரை அளவை செவ்வனே நிர்வகிக்க உதவுகிறது. மேலும், உங்கள் உடல் இயக்கங்களை சுறுசுறுப்போடும் வலிமையோடும் வைத்திருக்க இது உதவும்





நம்பிக்கை #4 : உடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கே !


நிஜம் : ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் "ஏரோபிக்", யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முடியோர்களை காக்கவல்லது.






நம்பிக்கை #5 : உடற்பயிற்சிக்கு ஏற்ற உடைகள் அவசியம்.

நிஜம் : விலை மதிப்புள்ள இறுக்கமான உடைகள் தேவை இல்லை. சௌகரியமான உடைகளே போதுமானது.





நம்பிக்கை #6 : உடற்பயிற்சியால் நம் உடலின் கொழுப்பு தசைகளாக மாறுகிறது.


நிஜம் : கொழுப்புச் சத்தும் தசை நாறுகளும் முற்றிலும் வேறுபட்ட அணுக்களால் ஆனது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவற்றில் ஒன்றை இழந்து மற்றொன்றை பெறலாமேயன்றி இவை மற்றொரு வடிவத்திற்கு மாறாது.



**



உடற்பயிற்சியின் பலன்கள் :


முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது.




முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை உடற்பயிற்சி செய்தால், கீழ்காணும் நன்மைகள் பெறலாம் :


1. எடையை கட்டுப் படுத்தலாம்

2. திண்மையும் வலிமையும் பெறலாம்

3. மூட்டுகளிலும் தசைகளிலும் இளக்கம் பெறலாம்

4. மன அழுத்தம் குறைக்கலாம்

5. நம் மதிப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தலாம்

6. எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலிமை ஏற்படுத்தலாம்

7. மாத விடாய் பிரச்சனைகளை மட்டுப் படுத்தலாம்.

8. மூப்படையும் போது வலிமையை பேணலாம்.



***


நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?



வெளியிடம் செல்கையில் ...

1. லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது


2. பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது



*


அலுவலகங்களில் ...


3. இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.


4. சக பணியாளர்களை, மதிய உணவிற்கு பின்பு மேற்கொள்ளும் சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்த்து கொள்ளலாம்.


*


வீட்டில் உள்ள படியே ...


5. தொலைக் காட்சியில் விளம்பர இடைவேளைகளின் போது கை கால்களை நீட்டியோ உட்கார்ந்து எழுந்தோ தசைகளை தளர்வடையச் செய்யலாம்.


6. பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்


7. இரவு உணவிற்கு பிறகு தொலை காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.





***
thanks யாழினி
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "