...

"வாழ்க வளமுடன்"

26 மார்ச், 2010

சாக்கலேட் பற்றி பொது அறிவு

சாக்லேட்டை விரும்பி சப்பிடாதவர்கள் யாரு இருக்க முடியாது. அதை பற்றி நமக்கு என்ன தெரியும். தெரிந்துக் கொள்ள இக்கடலில் குதியிங்கள்!

சாக்கொலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும்.

*

சாக்கொலேட் என்ற சொல் மத்திய மெக்சிகோவில் தோன்றிய சிவப்பிந்தியர்களின் நவாட்ல் மொழிச்சொல்லாகும். மாயன் இன மக்கள் காலத்திய பானைகளில் காணப்படும் கொக்கோ படிமங்கள், சுமார் கி.மு 600 ஆம் ஆண்டிலேயே கொக்கோ பருகப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அஸ்டெக்குகள் சாக்கொலேட்டை தமது இனவிருத்திக் கடவுளான ஸொசிக்வெட்சலுடன் தொடர்புப்படுத்தி வந்தனர்.

*

புதிய உலகத்தில், சாக்கொலேட் வனிலா, மிளகாய் மற்றும் அச்சியோட் சேர்த்து ஸொக்கொட்ல் என்ற பெயருடைய பானமாக பருகப்பட்டு வந்தது. ஸொக்கொட்ல் ஒரு களைப்பு நீக்கி உற்சாக பானமாக கருதப்பட்டது (பெரும்பாலும், அதிலுள்ள தியொப்ரொமினால்). கொலம்பியாவிற்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்கொலேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு, பண்ட மாற்றுக்குக்கூட பயன்படுத்தப்பட்டது. பிற சாக்கொலேட் பானங்கள் சோளக்கூழ் மற்றும் தேனுடன் பருகப்பட்டு வந்தன.


*

அமெரிக்காவை கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், ஸ்பெயினின் ஆளுனர்களுக்கு காண்பிக்க சிறிது கொக்கோ கொட்டைகளை எடுத்து வந்தார். ஆனால் ஹெர்னான்டோ டி சோடோ தான் இவற்றை பரவலாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.

*

பழம் உலகதிற்கான முதல் சாக்கொலேட் பண்டகம் 1585 ஆம் ஆண்டு வெராகுருஸிலிருந்து செவில்லுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது ஒரு பானமாகவே பருகப்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் அதில் சர்க்கரை சேர்த்து மிளகாய் நீக்கி பயன்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் போது சாக்கொலேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது.

*

18ஆம் நூற்றான்டின் இறுதியில், முதல் திட வடிவ சாக்கொலேட் துரின் நகரில் தயாரிக்கப்பட்டது. 1826 முதல் பியர் பால் கஃபரேல் என்பவரால் அதிக அளவில் விற்கப்பட்டது. 1828 ல் கான்ராட் ஜே வான் ஹூட்டென் என்ற டச்சுக்காரர் கொக்கோ கொட்டையிலிருந்து கொக்கோ தூள் மற்றும் கொக்கோ வெண்ணை தயாரிக்கும் முறையை காப்பீடு செய்தார். மேலும் அவர் டச்சு முறை என்றழைக்கப்படும் கொக்கோ தூள் தயாரிப்பு முறையையும் உருவாக்கினார். ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் தான் 1847 இல் முதல் கனசெவ்வக சாக்கொலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின் இது காட்பரி சகோதரர்களல் தொடரப்பட்டது.

*

டேனியல் பீட்டர் என்ற சுவிஸ் மெழுகுவத்தி தயாரிப்பாளர் 1867 இல் பால் கலந்து முதல் பால் சாக்கொலேட்டை உருவாக்கினார். ஹென்றி நெஸ்லே என்ற மழலை உணவுத் தயாரிப்பாளர் இவருக்கு பாலிலிருந்து நீரை நீக்கி, தடித்த பால் உருவாக்க உதவினார். இது பூஞ்சைத் தொல்லையிலிருந்து சாக்கொலேட்டுகளைக் காக்க உதவியது. ருடால்ஃப் லின்ட் என்பவர் சாக்கொலேட் கலவையை சீராக்க, அதனை சூடாக்கி அரைக்கும் கான்ச்சிங் எனப்படும் முறையைக் கண்டு பிடித்தார்.

*

மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை.

*

இக்கொட்டைப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறாக அழைக்கப்பட்டாலும் அமெரிக்க சாக்கொலேட் தொழில் நிறுவனம் கூறுவது:

*

1. கொக்கோ என்பது கொக்கோ கொட்டையின் திடநிலை பொருட்கள்.

*

2. கொக்கோ வெண்ணை என்பது கொக்கோ கொட்டையின் கொழுப்புப் பாகம்.

*

3. சாக்கொலேட் என்பது இவ்விரு பாகங்களின் தொகுப்பு.

***

சாக்கொலேட் என்று பொதுவாக அழைக்கப்படும் இனிப்புப் பண்டம், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது.சாக்கொலேட்டைப் பயன்படுத்தி கொக்கோ அல்லது பருகும் சாக்கொலேட் என்று அழைக்கப்படும் பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மத்திய கால அமெரிக்கர்களாலும் அங்கு வந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன.

*

சாக்கொலேட் பெரும்பாலும் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை அல்லது முயல் வடிவிலும், கிறிஸ்துமஸ் பன்டிகையின் போது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் போது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றன.


***


சாக்கொலேட் வகைகள்:

*


1. இனிப்பூட்டப்படாத சாக்கொலேட்:

*

இது தூய வெளிப்பொருள் கலக்காத சாக்கொலேட் கூழ் ஆகும். கொக்கோ கொட்டைகளை அரைத்துத் தயாரிக்கப்படும் இக்கூழ், கசப்பு அல்லது பேக்கிங் சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆழமான சாக்கொலேட் சுவைமணம் கொண்ட இக்கூழ், சர்க்கரை சேர்த்து அமெரிக்க-வகை அடுக்குக் கேக்குகள், பிரௌனிக்களுக்கு அடிப்படைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


**

2. கரும் சாக்கொலேட்:

*

பால் கலக்கப்படாத இவ்வகை சாக்கொலேட், கலப்பிலா சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் இவ்வகை சாக்கொலேடில் 15% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன் இதனை இனிப்பு சாக்கொலேட் என்று அழைக்கிறது. ஐரோப்பிய விதிகள் இவ்வகை சாக்கொலேட்டில் குறைந்தது 35% சாக்கொலேட் திடப்பொருட்கள் இருக்க வேண்டுமென வேண்டுகின்றன.


**


3. கூவெர்சர்:

*

இவை அதிக கொக்கோ வெண்ணையுடைய உயர்தர சாக்கொலேட்டுகள் ஆகும். இவ்வகை சாக்கொலேட்டுகள் மிக அதிக வீதத்தில் கொக்கோ கூழ் மற்றும் கொக்கோ வெண்ணை கொண்டனவாயும், உருக்கும்போது நல்ல திரவ நிலையடைவனவாயும் இருக்கும். பொதுவாக இவை மிக உயர்தர சாக்கொலேட் சுவைமணம் கொன்டவையாகக் கருதப்படுகின்றன. இத்தரமிகு சாக்கொலேடுகளில் கசப்பு முதல் இனிப்பு வரை பல்வேறு வகைகள் இருப்பினும் மிகச்சிறு சுவைமண வேறுபாடுகளைத் தெளிவாகக் இனங்காண முடிவதால் இவை இதே பண்புகளுள்ள உயர்தர ஒயின்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தொழில்முறை சமையலாளர்களால் இனிப்புப் பண்டங்களில் பயன்படுத்தப்படும் மிகப் பிரபலமான தயாரிப்புகள்: வால்ரோனா, லின்ட் & ஸ்ப்ருங்க்லி, கெக்கோ பெர்ரி, எஸ்பிரிட் டெ ஆல்ப்ஸ் மற்றும் கிட்டார்ட்.

**

4. பால் சாக்கொலேட்:

*

இவ்வகை சாக்கொலேட்டுகள் பெயருக்கேற்ப பால் தூள் அல்லது தடித்த பால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கம் இவற்றில் 10% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்றும், ஐரோப்பிய விதிகள் குறைந்தது 25% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டுமெனவும் விதிக்கின்றன.

**

5. மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்கொலேட்:

*

இவ்வகை சாக்கொலேட்டுகள் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பொதுவாக அதிக சர்க்கரை கொண்ட கரும் சாக்கொலேட்டுகளேயாகும். ஆனால் இவற்றில் கரும் சாக்கொலேட்டை விட குறைந்த அளவு கொக்கோவே இருக்கிறது.

**

6. கசப்பு-இனிப்பு சாக்கொலேட்:

*

இது சாக்கொலேட் கூழுடன் சர்க்கரை, கொக்கோ வெண்ணை, லெசித்தின் மற்றும் வனிலா கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மித இனிப்பு வகை சாக்கொலேட்டுகளை விட குறைவான சர்க்கரையும், அதிகமான சாக்கொலேட் கூழும் உடையவை. சுவைக்கேற்ப இவ்விரு வகைகளில் ஒன்றை சமையலில் பயன்படுத்தலாம். உயரிய தரமுள்ள கசப்பினிப்பு சாக்கொலேட்டுகள் கூவெர்சர் வகையாக தயார் செய்யப்பட்டு, அவற்றின் சாக்கொலேட் கூழ் வீதம் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு சாக்கொலேட் கூழ் உள்ளதோ அவ்வளவு கசப்பினிப்புடன் இவற்றின் சுவை இருக்கும்.

**

7. வெள்ளை சாக்கொலேட்:

*

இவை கொக்கோ திடப்பொருட்கள் இல்லாமல் கொக்கோ வெண்ணை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் இனிப்பு பண்டங்களாகும்.

**

8. கொக்கோ தூள்:

*

இரு வகை சுவையூட்டப்படாத பேக்கிங் கொக்கோ தூள்கள் உள்ளன. இயற்கையான கொக்கோ மற்றும் டச்சு-முறை கொக்கோ. இவை இரண்டுமே மிதமாக கொழுப்பு நீக்கிய சாக்கொலேட் கூழை பொடித்து கொக்கோ வெண்ணை நீக்கப்பட்டு தயாராகின்றன. இயற்கையான கொக்கோ வெளிர் நிறமும், சற்றே அமிலத்தன்மையும், மிக அதிக சாக்கொலேட் சுவைமணம் கொண்டதாயும் இருக்கும். பேக்கிங்கின் போது இவ்வகை கொக்கோவுடன் சமையல் சோடா சேர்க்கப்பட வேண்டும். கொக்கோவின் அமிலத்தன்மையும், சோடாவின் காரத்தன்மையும் கலப்பது மாவுக்கலவையை வாயு நிறைத்து மிருதுவாக்கும். டச்சு முறை கொக்கோ தயாரிக்கப்படும் போதே காரம் சேர்க்கப்பட்டு அதன் அமிலத்தன்மை சமனாக்கப் படுகிறது. இவ்வகை கொக்கோ சற்றே குறைந்த சுவைமணமும், ஆழமான நிறமும் கொண்டிருக்கும்.





**

மேலும் புதினா, ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவைமணங்கள் சாக்கொலேட்டுடன் கலக்கப்படுவதுண்டு. நாம் பொதுவாக சாக்கொலேட் என்று சாப்பிடும் இனிப்பு பண்டம் சாக்கொலேட்டுடன் கடலை, அரிசிப்பொரி, கொட்டைகள் போன்ற மற்ற இடுபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாராய வகை பானங்கள் கலந்தும் சாக்கொலேட் தயாரிக்கப்படுகிறது.

***
சாக்கொலேட்டினால் ஏற்ப்படும் விளைவுகள்:
*
உடல்நல பலன்கள்:
*
1. அண்மைய ஆய்வுகளின்படி கொக்கோ அல்லது கரும் சாக்கொலேட்டினால் மனிதர்களுக்கு உடல்நல பலன்கள் விளையக்கூடும் என்று தெரிகிறது.
*

2. கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் மற்றும் கேலிக் அமிலம் எனும் ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன.
*

3. மேலும் சாக்கொலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கொலேட்டில் உள்ளன.
*

4. ஓர் அறிவியல் ஆதாரமற்ற உடல் நல உணவுமுறை கூட மாத்திரை வடிவில் சாக்கொலேட் மற்றும் கொக்கோ தூளை உண்ண பரிந்துரை செய்கிறது. இருப்பினும் பால் சாக்கொலேட்டையோ வெள்ளை சாக்கொலேட்டையோ உண்பது பெரும்பாலும் உடல் நல விளைவுகளை ஏற்படுத்தாது.
*

5. சாக்கொலேட் ஒரு உடற்சக்திப்பொருளும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவாதலால் நாள்தோறும் சாக்கொலேட் சாப்பிடுவது உகந்ததல்ல.
***
இன்னும் இதனுடைய விளைவுகளை தெரிந்துக் கொள்ள இந்த தளத்தை கிளிக் செய்து படிக்கவும்.
***
நன்றி விக்கிபீடியா.
இந்த தகவல் உங்கலுக்கு உபயோகமாக இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! நன்றி.



***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

புற்று நோயை போக்கும் கோதுமை புல் சாறு.

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும்.


இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.

***

புற்று நோய் :

*

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது.

*

இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

*

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனைசெய்கிறார்கள்.இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.


*

வீடியோ காட்சி காண கிளிக்
( http://www.youtube.com/watch?v=jviegr6bqEE )

*

ஆங்கில கட்டுரை படிக்க கிளிக்
( http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20050531&filename=news&sec_id=4&sid=12 )

மேலும் அறிய கூகிள் தேடுதளத்தை பயன்படுத்துங்கள்.

*


புற்று நோயை எதிர்க்கும் மேலும் சில உணவுகள் பற்றிய விபரங்களை கீழேயுள்ள வலைதளம் விரிவாக கூறுகிறது. படித்து பயன்பெறுவீர்.

*
http://www.cancure.org/cancer_fighting_foods.htm

***

by வின்சென்ட்
நன்றி திரு. வின்சென்ட்.

http://maravalam.blogspot.com/2007/09/blog-post.html

***

திரு. வின்சென்ட் அவர்களால் இந்த தகவல் தெரிந்துக் கொண்டத்தறகு நான் மகிழ்கிறேன். நல்ல தகவல் நன்றி நண்பரே!





***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் இயற்க்கையின் வரம் ஏறாலம். இனி அதை பற்றி பார்ப்போம்.

நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

*

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.


*

இவை ஸ்பெயின், துருக்கி, சிரியா, ஈரான் நாடுகளிலும் விளைகிறது. வெண் திட்டுகள், வெண்குட்டம் கண்ட இடத்தில் பூசி ஊற வைத்துக் குளித்து வர வெண்மை மாறி வரும். அதிமதுரத்தை தொடர்ந்தும், அதிகமாகவும் உண்ண உடல் எடை கூடும்.


*

இது ஆற்றங்கரைகளில் வளரும். வெளிநாட்டுக் குண்டுமணிச் செடியின் வேருக்கு அதிமதுரம் எனப் பெயர். ரஷ்யாவிலும், சீனாவிலும் இது விளைகிறது. 24 அடி உயரம் வரை உயர்ந்து வளரும் செடி அதிமதுரம், வேர் வெட்ட வெட்ட அழியாது. பல வருடங்கள் கழித்தும் வெட்டிய வேர் துளிர்க்கும். பல நோய்களை அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அதிமதுரம் இனிப்பு சுவையுள்ள வேர். ஸ்பெயினில் நன்கு வளரும்.

*

சுருட்டுப் பருமனில் ஏறத்தாழ அதே நீளத்தில் குச்சி, குச்சியாக சிவப்புச் சாயலுடன் அதிமதுரம் இருக்கும். இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை. கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.

*

அதிமதுரம் என்றால் அதிக இனிப்புள்ளது என்று பொருள். இதன் வேர்ப்பகுதி தான் அதிமதுரம். இதை வடமொழியில் யஷ்டிமது என்றழைப்பர். இது இமயமலை அடிவாரத்தில் ஏராளமாக வளர்கிறது.


*


பண்டைய காலத்தில் எகிப்து, சீனம், கிரேக்கம் போன்ற நாடுகளில் புகையிலைகளுடன் அதிமதுரம் சேர்த்து புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் புகையினால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்பட்டது. அதிமதுரத்திலிருந்து எடுக்கப்படும் சத்தானது கரும்பின் சர்க்கரையை விட ஐந்து மடங்கு இனிப்பு கொண்டதாகும்.

***

அதிமதுரத்தின் பயன்கள்:

*

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

*

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

*

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

*

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

*

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

*

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

*

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

*

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

*

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

*

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.


*


11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.


*


12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.


*

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

*

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.


*

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

*

16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.


*


17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

*

18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

*


19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

*

20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.


*

21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

*

22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

*

23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

*

24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

*


25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

*

26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

*

27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

*

28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

*

29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

*

30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

***

அதிமதுரத்தில் இவ்வளவு சங்கதி இருக்கு, இனி தேடி பார்த்துனாலும் வாங்கிடுவிங்க இல்லையா. உடலுக்கு நல்லது என்றால் எவ்வளவு வேண்டுமாலும் தேடிப் போகலாம் ( தகவல் அறிய ), வாங்கி பயன்படுத்தலாம்.

***

நன்றி குமுதம் ஹெத்து-july2006
நன்றி விக்கிபீடியா.
நன்றி தமிழ்வாணன்.காம்.

***

உங்களுக்கு இது உபயோகமாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். நன்றிகள்.



***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "