...

"வாழ்க வளமுடன்"

24 பிப்ரவரி, 2011

காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு !


சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.

”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள்.

இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட்.

குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம். காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம்.

*

சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு.

“காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”

பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.


“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது.

அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள்.

முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும்.

தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது!

காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும். பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான்.

காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும்.

பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.

காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.

காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.

காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்!



***
thanks ஜவஹர்
***


"வாழ்க வளமுடன்"

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!


நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.


உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

**

தலைவலி :

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, "தலை வலிக்கிறது' என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்

**

மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?

நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.


படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம்.


வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

**

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன.

விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

**

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.

இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, "ஆன்டாசிட்' மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.



மலச்சிக்கல் :

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.

**

கழுத்து வலி :

கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

**

உயர் ரத்த அழுத்தம் :

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது.

இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.


***
thanks வார மலர்.
by - டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி
***




"வாழ்க வளமுடன்"

நடை பயிற்சி (Walking) உண்டாகும் நன்மைகள் !



நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.


விஞ்ஞான யுகத்தில் வெகுதூரம் சென்ற மேலை நாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் சித்தர்கள் சொன்னதை இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள். சித்தர்களின் அறிவாற்றல் மேலைநாட்டு மக்களுக்கு புரிய ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.


இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்தர்கள் வழிவந்த நம் மக்கள், அறிவு ஜீவிகளாக தன்னைக் காட்டிக்கொண்ட மேலை நாட்டு மக்களின் அறியாமையை நாகரிகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வந்தோம். விளைவு மேற்கண்ட நோய்கள்தான். ஆயுளையும் குறைத்து ஆரோக்கியத்தையும் இழந்து பேதை மனிதனாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


அறிவிலும்,ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் அவசியம் பயிற்சி தேவை என்பதை சொல்லவே தியானம், யோகா மற்றும் மலை ஏறுதல், பாதையாத்திரை என பல வழிமுறைகளைச் செல்லிவைத்தனர். அவர்களும் அதைக் கடைப் பிடித்து நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர்,


திடகாத்திரமான 100 இளைஞர்கள் ஒரு நாட்டின் சரித்திரத்தை மாற்றலாம் என்று கூவி அழைத்த சுவாமி விவேகானந்தர் அவதரித்த தேசமும் இதுதான். அந்த இளைஞர்கள் இன்று இல்லை.மேலை நாட்டு மது வகையில் சிக்கி ஆரோக்கியத்தை இழந்து நிற்கும் இளைஞர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.


பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் இல்லை. விளையாட அனுமதிப்பதும், சொல்லிக் கொடுப்பதும் இல்லை. விளையாட்டு, உடற்பயிற்சி என்பது ஏதோ ஒரு தேவையற்றது என்று பெற்றோர் நினைக்கின்றனர்.


படிப்பு ஒன்றே எல்லாவற்றையும் தந்து விடாது. நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தானே நன்றாக படிக்கவும் முடியும். நோய்களின் தாக்கம் வந்த 45 வயதை கடந்தவர்கள்தான் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்கிறார்கள்.


கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு.


குழந்தைகளுக்கு படிப்புடன் உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். பாரதி கூறிய படி மாலையில் விளையாட அனுமதியுங்கள். அப்போதுதான் திடகாத்திரமான பலமான இளைஞனாக உங்கள்குழந்தை வளருவார்கள்.


உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், என பலவகை உண்டு. இந்த இதழில் நடைப்பயிற்சி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம்.


நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள veNtiya பயிற்சியாகும்.


பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.


நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும்,அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.


நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.



***

நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்:


1· உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.

*

2· உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். வியர்வை நன்கு வெளியேறும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.

*

3· காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.

*

4· நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது, மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

*

5· எலும்புகள், பலப்படும். தசைகள் சுருங்கி விரியும்.

*

6· உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

*

7· நல்ல உறக்கம் கிட்டும்.

*

8· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*

9· முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.

*

10· கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*

11· செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.

*

12· முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

*

13· தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.

*

14. நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும்.

*

15. ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி.



தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம் :)



***
நன்றி:- நக்கீரன்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "