...

"வாழ்க வளமுடன்"

10 டிசம்பர், 2010

குறட்டை ஆபத்தின் அறிகுறியா ?

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். "நீ குறட்டை விடுகிறாய்...' என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.


நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும்.

*

அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

*

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.

*

அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

*

சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது.

*

ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும்.

*

இதற்கு, "அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

***

"அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' ஏற்படுவதற்கான அறிகுறிகள்:


அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் "எப்ஒர்த்' என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.


கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.
(0 - எப்போதும் இல்லை, 1 - குறைந்த அளவு வாய்ப்பு, 2 - போதுமான அளவு வாய்ப்பு, 3 - அதிக அளவு வாய்ப்பு).

**

1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?

அ) "டிவி' பார்க்கும் போது.
ஆ) "மீட்டிங்'கில் உட்கார்ந்திருக்கும் போது.
இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.
ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.
உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.
ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், "டிராபிக் சிக்னலில்' நிற்கும் போது.


மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.


*

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.


சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர்.



உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், "டிவி' பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.



குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, "ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.



காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.


ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, "ஸ்லீப் அப்னியே' நோயிலிருந்து மீண்டு விடலாம்.


மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்;



இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.


தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.



குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும்.



"ஸ்பைரோ மீட்டர்' கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.



தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.



***
நன்றி: தினமலர்
***


"வாழ்க வளமுடன்"

உள்ளங்கைக்கு எலுமிச்சை பயிற்சி

ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம்.

பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டிதான். ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் 'பட்டுப் போன்ற கைகள்' ஒரு கட்டத்தில் பரிதாபமாக மாறலாம்.


சிலருக்கு வெடிப்பு, வறட்சி, அரிப்பு, கோடுகள், தோலுரிவது போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நகம் உடைந்து போவது, நிறம் மாறுவது, புள்ளிகள் தோன்றுவது என நகத்திலும் பாதிப்புகள் வரலாம். 'அதுக்காக வேலை பார்க்காம இருக்க முடியுமா..?' என்றால், முடியாதுதான். ஆனால், உங்கள் ஊட்டச்சத்திலும், கைகளின் பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால்... உங்கள் உள்ளங்கையில் தங்குமே மென்மை!


உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் 'வாசலின்' தடவிக் கொள்ளலாம்.


ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை கைகளுக்கு பூசி, தேய்த்துக் கழுவுங்கள்.



ஆலிவ் எண்ணெய் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். உருளை, கருமையை எடுத்துவிடும். வெடிப்புகள் தொடராமல் இருக்க... நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் வகைகளை அருந்துவதும் அவசியம்.



வைட்டமின்-சி குறைபாட்டால் சிலருக்கு கைகளில் தோல் உரியலாம். டிடர்ஜென்ட் பவுடர், சோப் போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்பட்டு தோல் உரியலாம். 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன் தயிர் கலந்து கை, உள்ளங்கை, விரல் இடுக்கில் பூசி, மிதமான வெந்நீரில் தேய்த்துக் கழுவுவதுடன், மறக்காமல் நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.


நகத்தின் நிறம் சிலருக்கு திடீரென பழுப்பு நிறத்தில் மாறலாம். இரும்புச்சத்து குறைபாடுதான் இதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய, வெதுவெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.


அதீத வெயிலோ, கடும்குளிரோ சட்டென நம்மை பாதிக்கும்போது, விரல் நகம் உடையலாம். பாதாம் பாலை கை, விரல், நகங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுவடையும்.


நகங்களில் திடீரென வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். நம்மையும் அறியாமலேயே நகங்களில் விழும் சின்ன அடி அல்லது பலமான அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் குறைவாகி இப்படி வெண் புள்ளிகள் வரலாம். நகத்தில் வெண்ணெய் அல்லது தயிர் தடவி வந்தால், ஓரிரு நாட்களிலேயே புள்ளிகள் மறைந்துவிடும்.



உள்ளங்கை, கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறக்க, தோலின் சுருக்கங்கள் நீங்கி, தசைகள் விரியும்.


நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு எலுமிச்சம்பழத்தை உள்ளங் கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.



***
thanks ஆனந்தவிகடன்
***



"வாழ்க வளமுடன்"

கொளுத்த உடம்பு கொடிய நோயை ஏற்ப்படுத்தும் !

உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஒரு வெறி பிடித்தது போலவே உடலும், மனமும் எடைக்குறைப்பில் இயங்குகிறது என்கிறார்கள் மனநல நிபுணர்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!.


உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை. இந்த உணவின் அளவை எப்படி குறைப்பது? இதுவே நம்முன் உள்ள முக்கிய பிரச்னை.


அறிவோ - வாயை மூடு, மூடு என்கிறது. ஆசையோ வாயைத் திறக்க உத்தரவிடுகிறது. மதி போதும், போதும் என்று சொல்ல மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறது. உண்ணும்போது இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்கும் மனிதர், பிறர் பார்க்கும்போதும் இன்னும் கொஞ்சம் என்று பார்க்கும்படி இருக்கமாட்டார்.



வீட்டில் கண்படும் இடங்களில் எல்லாம் தரம் குறைந்த உணவுகள், கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது.


பார்க்கும் இடமெல்லாம் பழங்களாக நல்ல உணவுகளே கண்ணில்பட வேண்டும். மேலும் தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், தவிடு நீக்கப்பட்ட தானிய உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.


நாம் எப்போதும் உண்டு கொண்டே இருப்பதை ஒரு பழக்கமாக்கிவிடோம். மகிழ்ச்சியைக் கொண்டாட உண்கிறோம். துக்கமாக இருக்கும்போதும் உண்கிறோம். சலிப்பாக இருக்கும் போதும் உண்கிறோம். தோல்வியில் துவண்டபோது அதை மறக்கவும் உண்கிறோம். பய உணர்வு உள்ளபோது அதில் இருந்து விடுபடவும் உண்கிறோம்.


வயிற்றை நினைப்பவன் வாழ்வில் உயரமாட்டான் என்பது பழமொழி. வயிற்றை நினைக்காமல் ஆர்வத்தோடு உழைப்பில் கவனம் வைக்க வேண்டும். ஆர்வத்தோடு உழைக்கும்போது வயிற்றை மறக்கிறோம்.


உற்சாகமாக விளையாடும் குழந்தைகளும், ஆர்வமாக உழைக்கும் மனிதர்களும் அந்த வேளைகளில் உணவை மறக்கிறார்கள். அப்போது உடலின் எடையும் குறைகிறது. வாழ்வின் வளமும் கூடுகிறது.


வயிற்றில் கண்டவற்றை போடுவதில் நாம் கில்லாடிகள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பது போலவே பலவற்றை குப்பைகளை குவியலாய் வயிற்றில் கொட்டுகிறோம். வாய் வழியே! வயிறு பாவம்!

***

1. குப்பைத் தொட்டியா?

உடலும் மனமும் உண்டது போதும் என்று நினைக்கும் போது ஐய்யோ தட்டில் போட்டுவிட்டது வீணாகிறதே. காசு கொடுத்து வாங்கியதை தூர கொட்ட முடியுமா? என்று நம் வாயைத் திறந்து வயிற்றில் திணிக்கக் கூடாது.


வீணாய்ப் போவதை உள்ளே கொட்ட நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா?

எப்போதும் டேபிள் ஸ்பூனினால் உணவை எடுத்து தட்டில் வைக்க வேண்டும். அப்போது உணவின் அளவின் மேல் ஒரு கவனம் இருக்கும். தொப்பையில் குப்பை கூடாது.

*

2. திறக்க தாமதிக்கவும், மூடுவதற்கு முந்தவும்:

வாய், வயிறு என்ற தொழிற்சாலையை எத்தனை முடியுமோ அத்தனை தாமதமாக திறக்கவும், முடிந்தவரை சீக்கிரம் மூடவும், பழகவேண்டும். காலை உணவை ஒன்பது அல்லது பத்து மணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு உணவை ஆறு அலலது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிடவேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.

*

3. காரமற்ற காலை உணவு :

காலையில் உணவு மென்மையாக இருக்கும். எனவே காலை உணவில் காரமுள்ள சட்டினி, சாம்பார் இருக்கக் கூடாது. இந்த கார உணவுகள் வயிற்றில் உறுத்தலை உருவாக்கும்.


மேலும் இந்த கார உணவுகள், நிறைய இனிப்பு உணவுகளை உள்ளே இழுக்கும். இதனால் உள்ளே செல்லும் உணவின் அளவும் கூடும். காலை உணவில் பழ ஜூஸ், மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம்.


இல்லையேல் சட்டினி, சாம்பார் இல்லாமல் வெறும் இட்லியோ, சப்பாத்தியோ சாப்பிடலாம். இதனால் சாப்பாட்டின் அளவு குறையும். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.


*

4. மெல்லுக முடிந்தவரை :

நாம் உண்ணும் உணவை இதுதான் கடைசி கவளம் என்ற உணர்வோடு எத்தனை நேரம் வாயில் வைத்து மெல்ல முடியுமோ அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்கவேண்டும்.


இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும். நாம் உணவை வாயில் வைத்து மெல்லும் போது நமது உமிழ்நீரில் கரைந்து அதில் ஒரு சிறுபகுதி வயிற்றுக்கு செல்லாமல் நேரடியாக வாயிலிருந்து உடலின் முக்கிய பகுதிக்கு செல்கிறது.


இப்போது உணவை செரிக்க வயிற்றுப்பகுதி தயாராகிறது இப்படி மென்று உண்பதால் குறைவாக சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்ட திருப்தி உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கிறது.

*

5. பசித்த பின் புசி :

மணி அடித்தால் சாப்பாடு என்பது போல உண்ணும் நேரம் வந்துவிட்டதே என சாப்பிட உட்கார்ந்து விட கூடாது. நல்ல பசி வரும் வரை உணவைத் தொடக்கூடாது. பசி வந்தபின் இரண்டு டம்ளர் நீர் அருந்தவேண்டும்.


அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது.


பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும், மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே லேசான பசி இருக்கும் போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். சாப்பாடு சகலமும் தான்.

*

6. எது பிடிக்குதோ அது மட்டும் :

நாம் திரைப்படம் பார்க்கிறோம். அந்த படத்தில் நமக்கு நகைச்சுவை பிடித்தால் அதை மட்டும் பார்க்கலாம். பாடல் காட்சிகள் பிடித்தால் அதை மட்டும் பார்க்கலாம். சண்டை காட்சிகள் பிடிக்கவில்லை என்றால் அதை தள்ளிவிட்டு மற்றவற்றைப் பார்க்கலாம்.


அப்போது நாம் விரும்பியதைப் பார்க்கவும், வேண்டாததை தவிர்க்கவும், நேரத்தை மிச்சம் பண்ணவும் முடிகிறது. அதாவது எது பிடிக்கிறதோ அதைமட்டும் பார்க்கமுடிகிறது. அப்படியே எது பிடிக்கிறதோ அது மட்டும் என்ற விதியைப் பின்பற்ற வேண்டும்.


உணவின் வாசனை நம்மைச் சுண்டி இழுக்கலாம். அப்போது அந்த உணவை உண்ண வேண்டுமென்று எண்ணக் கூடாது. உண்மையிலேயே உணவின் மணத்திற்கும் சுவைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது. ஆக உணவின் வாசனை பிடித்தால் அந்த வாசனையை மட்டும் ரசிக்கவேண்டும்.


பூக்களுக்கு மத்தியில் பட்டாம்பூச்சி பறக்கிறது அதை பார்த்து மட்டுமே ரசிக்கிறோம். அதை கையில் பிடித்து விளையாட நினைக்கிறோமோ? எனவே மனதின் ஈர்ப்பில் உணவை உள்ளே இழுக்கக் கூடாது.


மேலும் இட்லி பிடித்தால் இட்லி மட்டும்! சட்டினி, சாம்பார் இல்லாமல், சப்பாத்தி பிடித்தால் சப்பாத்தி மட்டும். சட்டினி பிடித்தால் இட்லி இல்லாமல் சட்டினி மட்டும். சாம்பார் பிடித்தால் சாம்பார் மட்டும் என்று சாப்பிட்டு மனத்தின் ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம்.


சாம்பார் நன்றாக ருசிக்கிறதே என்ற ஆசையோடு அதிக இட்லியை உண்ணக்கூடாது. அப்படி சாம்பாரின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அந்த சாம்பாரை மட்டும் கொஞ்சம் எடுத்து ரசித்து குடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம்.


அப்போது அதிகப்படியாக இரண்டு இட்லி உள்ளே செல்வது குறையும். உடல் எடையும் கூடாது. மனத்திற்கும் சுவைக்கும் அடிமையாகி இருக்கும்போது மட்டும் ஆசையை தீர்க்கவும் அதே வேளை உணவின் அளவு கூடாமல் இருக்கவும் இது ஒரு உத்தியாகும்.



சாம்பார், சட்டினி விட்டு கலக்கித்தான் இட்லி சாப்பிடவேண்டும் என்ற எந்த விதியும், சட்டமும் இல்லை. குழந்தைகள் தெளிந்த உணர்வோடு எது வேண்டுமோ அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். நாம் அதையே தடுத்துக் கொண்டிருக்கிறோம்.


எது பிடித்ததோ அது மட்டும் என்ற விதியைக் கடைபிடிக்கும் போது உணவின் அளவும் குறைகிறது. மனத்தின் ஆசையும் மறைகிறது. உணவைக் குறைப்போம், உடல் நலம் காப்போம். எனவே நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

*

7. உடற்பயிற்சி என்றால் என்ன?

உடல் இளைக்க சர்க்கரைநோய்க்கு இதுவே வழி. மேலும், கீழும் கை, கால்களை அசைப்பதோ? உடற்பயிற்சி கூடத்தில் மட்டுமே செய்யக் கூடியதா? அதிக நேரம் செலவிட வேண்டியிருக்குமா? ஆண்கள் மட்டும் செய்யக்கூடியதா? போன்ற பல எண்ணங்கள் நம் மனதில் எழலாம். ஆனால் இவை அனைத்துமே தவறானது.


இன்றைய காலகட்டத்தில் நம்மவர்கள் செய்யும் அதிகப்படியான உடற்பயிற்சி எது தெரியுமா? ‘டி.வி. ரிமோட் கண்ட்ரோல் பட்டனை?’ அழுத்துவது. ஒரு வேடிக்கையான கருத்துதான். ஆனால் நம்மை சிந்திக்க வைப்பவை. நம்முடைய சுறுசுறுப்புத் தன்மையை நாம் பலவழிகளில் குறைத்துக் கொண்டு வருகிறோம்.


இதனால் நாம் வேண்டி, வேண்டி வர வைப்பது உடல் பருமனை மட்டும் அல்ல. இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவையும் தான். உடற்பயிற்சி மூலம் நாம் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். ஒரு மைல் நடந்தோமானால் வாழ் நாட்களில் ஒரு நிமிடம் அதிகரிக்கிறது. சர்க்கரை பருமன் குறையும் இதனால்.

*

8. உடற்பயிற்சியில் இரண்டு வகைகள் உள்ளன:

ஏரோபிக்ஸ், அன் ஏரோபிக்ஸ். இதில் ஏரோபிக்ஸ் என்பது சுறுசுறுப்பாக நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி போன்றவை இதில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. மற்றது அன் ஏரோபிக்ஸ் என்பது எடை தூக்குதல், ஜிம்னாடிக்ஸ் போன்றவை. இங்கே குறைந்த அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன.


அதனால் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளே நீரிழிவு உள்ளவர்களுக்கும், வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லது. நீங்கள் கேட்கலாம், 40-50 வயதுகளில் ஓடமுடியுமா? நீச்சல் அடிக்க முடியுமா? என்று நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி என்பதே எங்கள் பதில். நடப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இருபாலரும் நடக்கலாம்.


தவிர உபகரணப் பொருட்களும் தேவையில்லை. செலவும் இல்லை. சாலையில் இறங்கி நடக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால் எடுத்த உடனேயே ஒரு மணி நேரம் நடக்க கூடாது. ஒரே வாரத்தில் நடப்பதை வெறுத்து விடுவீர்கள்.


மெதுவாக வேகத்தையும் நேரத்தையும் அதிகப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் 20 நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். பின்பு 2 மாதம் கூட நேரம் எடுத்துக் கொண்டு வேகத்தை அதிகரிக்கவும். அதாவது அதே 20 நிமிடங்களில் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடக்கலாம். பின்பு சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம்.


அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 4 - 5 கிலோ மீட்டர் வரை நடக்கலாம். பொறுமையாக வேகத்தை அதிகரித்தீரானால் 5 கிலோமீட்டர் என்பது ஒரு பொருட்டே அல்ல. எடை நோய்களுக்கு தடை.

*

9. உடற்பயிற்சிக்கு நன்மைகள் இல்லாமலா?

இன்சுலின் சுரப்பது மற்றும் இன்சுலின் வேலைப்பாடும் அதிகரிக்கும், சரியான உடல் எடையைப் பேணலாம். இரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். சீரான தூக்கம் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, உடலுக்கும் மனதுக்கும் பூரண ஆரோக்கியத்தை கொடுக்க கூடியவை.


நீரிழிவு உள்ளவர்கள் மட்டுமில்லாமல் யாருக்கெல்லாம் உடல் மன ஆரோக்கியத்தைப் பற்றி நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். பல பெண்களுக்கு சந்தேகம் உண்டு. வீட்டு வேலைகள் அனைத்தும் நாங்கள்தான் செய்கிறோம்.



நாங்கள் கண்டிப்பாக நடந்தே தீரவேண்டுமா? என்று. இதற்கு பதில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சிக்கென்றே நேரம் ஒதுக்கிச் செய்தால் பலன்கள் அதிகரிக்கும். உடற்பயிற்சி நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. ஆரோக்கியம் என்பது வாழ்க்கை தரத்தை உயர்த்தும். இதனால் தன்னம்பிக்கை வளரும்.


தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியும். உடற்பருமன் உள்ளவர்களுக்கு நடை சிறந்த மருந்து. நடக்கவும். நீங்கள் நடந்தால் நல்லது நடக்கும். ஆரோக்கியம் கிடைக்கும்.

*

10. உடற்பருமனைக் குறைக்க:

என்ன காரணங்கள் என்பது பற்றி தெள்ளத் தெளிவாக தெளிந்து, அதற்கேற்ற மருந்துகளை பொதுவாக தேர்வு செய்து கொடுப்பார்கள். பரம்பரை தன்மை என்றால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு, பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு ஸ்ட்ராய்டு மருந்துகளை சாப்பிடுவார்கள்.


புற்றுநோய் உள்ளவர்கள், மகப்பேறுக்குப்பின், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டு, ஆங்கில மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகளைக் கொடுப்பார்கள்.

*

11. கொழுத்த உடம்பு கொடிபோல் இளைக்க உதவும் ஹோமியோபதி மருந்துகள் :

எந்த வகை உடற்பருமனாக இருந்தாலும் Calcarea Carb, Selenium, Ignatia, Arm.NIT, Aconite, Podophyllum போன்ற ஹோமியோபதி பொட்டன்சி மருந்துகளையும், பயோகெமிக் மருந்துகளையும் ஒரு சேர அல்லது தனியாகவோ கொடுக்கும்போது உடல் எடை குறைகிறது. இங்கு காரணம் முக்கியம்.


காரணத்தை துல்லியமாகக் கண்டுபிடித்து விட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து உடல் எடைக்கு தடை போடமுடியும். சிலவகை சொட்டு மருந்துகளையும் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனை அவசியம்.



ஆறு அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே கணிசமாக எடையைக் குறைக்கலாம். பத்து கிலோவிற்கும் மேலே குறைப்பது என்பது மிகவும் சுலபமானது. பக்க விளைவே கிடையாது.

*

12. ஆங்கில மருந்துகள் :

பொதுவான சில மருந்துகளையும், நோயின் காரணத்திற்காக சில மருந்துகளையும் கொடுப்பார்கள். நிறைய பக்க விளைவுகள் உண்டு. அறுவை சிகிச்சை மூலம் வயிற்றிலே குடலை கட்டிப் போட்டு உணவு உறிஞ்சப்படுவதை தடுப்பார்கள். பெரிய பயன் இருக்காது.



***
thanks தேடிப்பார்

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "