...

"வாழ்க வளமுடன்"

13 பிப்ரவரி, 2011

பிள்ளைகளின் நடத்தையில் பெற்றோரின் மனமாற்றம் அவசியம்!


பெற்றோரின் மனமாற்றம் அவசியம்!
- த.சிவபாலு எம்.ஏ.


எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்தாழம் மிக்கப்பாடல் வரிகள்.


இக்கருத்தை மெய்பிப்பது போன்று பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாடு, கட்டுப்பாடின்மை ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது உளவியலாளர்களின் ஆய்ந்தறிந்த துணிபு.

பெற்றோர்கள் எவ்வளவு தூரத்திற்குக் கண்டிப்பும், கடினமும், தண்டனை விதிப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களின் பிள்ளைகள் பின்னர் மிகவும் வலுச்சண்டையாளர்களாக, ஊறு விளைவிப்பவர்களாக, இன்னா செய்பவர்களாக வளர்கின்றார்கள் என்பது உளவியலாளர்களின் கணிப்பீடு.


இதனை நாம் எமது அனுவபவாயிலாகக் காணலாம். கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள் ஒன்றில் மிகவும் பயந்த சுபாவமுடையவர்களாக அல்லது ஆக்கிரமிப்புத்தன்மை மிக்க வலுச்சண்டைக்காரராக வளர்வார்கள்.


ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பதனை மனதில் கொண்டு பார்க்கும் போது ஒரு விளைவின் மறுவிளைவினை நாம் காணலாம் என்பதனை உளவியல் ரீதியில் ஆய்வுகள் செய்பவர்கள் கண்டறிந்து அதன் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதோடு பிள்ளைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும்,


அவர்கள் நல்ல பண்பாளர்களாக மாறுவதற்கு பெற்றோரின் நடத்தையில், எண்ணத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதனை முன்வைக்கின்றார்கள்.


மிகக் கட்டுப்பாடு நிறைந்த பெற்றோரின் பிள்ளைகள் மிகவும் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள். பெற்றோர் தங்கள் செயல்களை மாற்றும் போது பிள்ளைகளின் நடத்தையும் மாற்றமடைகின்றது.

National Longitudinal Survey of Children and Youth (NLSCY) என்னும் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின் படி, பெற்றோர் மிகக் கண்டிப்பான பிள்ளை வளர்ப்பு முறையினைக் கொண்டவர்களாக இருப்பதால், பிள்ளைகள் மிகக்கூடியளவு வன்முறைத் தன்மைகள், கவலைக்கிடமான, பொதுநல நோக்கற்ற அல்லது குறைந்த பண்புகளைக் காண்பிக்கின்றார்கள் என ஆலோசனை நல்கியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆய்வு பெற்றோர் குறைந்தளவு கண்டிப்பு உடையவர்களாக இருக்கும்போது, பிள்ளைகளும் மிகக் குறைந்த வன்முறை அல்லது போரூக்கப் பண்புகளையே கொண்டிருக்கின்றார்கள் எனக் காட்டுகின்றது. இதை மறுப்பக்கமாகப் பார்க்கும்போது அது எதிர்விளைவைக் கொண்டிருப்பதும் உண்மையே.


கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூத்த பகுப்பாய்வாளரான எலினோர் தோமஸ் "பிள்ளைவளர்ப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது, பிள்ளைகளின் நடத்தையிலும் மாற்றம் ஏற்படும் என்பது ஒரு பெரும் செய்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கனடிய சமூக அபிவிருத்தி நிலையமும், கனடிய புள்ளிவிபர நிலையமும் இணைந்து 4,129 பிள்ளைகளைப் பின்பற்றிச் செய்து கொண்ட ஆய்வின் விளைவாக இந்த முடிவுகள் பெறப்பட்டன.


பிள்ளைகள் இரண்டு வயதிற்கும் ஐந்துவயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்கும்போது 1994-95 காலப்பகுதியிலும், அவர்கள் 10 மற்றும் 13 வயதாக இருக்கும்போது 2002-03 காலப்பகுதியிலும் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் பெற்றோர் தமது கண்டிப்பு, தண்டனைகளைக் குறைவாகக் கொண்டிருந்த போது பிள்ளைகளின் வன்செயல்கள் அல்லது துன்புறுத்தும் பண்பு குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.


அதாவது ஒருபோதுமே தண்டனை அழிக்காத பெற்றோரின் பிள்ளைகளைப் போன்று இந்தப் பிள்ளைகளும் குறைந்தளவு வன்முறைகளைக் கொண்டிருந்தனர் என்பது வெளியாகியுள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் மிகவும் தண்டிப்பவர்களாக இருந்த பெற்றோரின் பிள்ளைகளே கூடிய வன்முறைப் பண்பினை உடையவர்களாகக் காணப்பட்டார்கள் என்பதும் ஆய்வின் முடிவாகும்.


தண்டனை வழங்கும் பெற்றோரின் பிள்ளைகள், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், தண்டனை அழிக்காத பெற்றோரின் பிள்ளைகள், சமூகம் சார்ந்த நடத்தை, எந்தப் பயனையும் எதிர்பார்க்காத, ஒருவருக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கு நன்மைபயக்கும் செயல்களைச் செய்தல்... போன்ற பண்புகளைக் கொண்டவர்களாகவும் வளர்வதையும் இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.


மக்கள், பிள்ளை வளர்ப்பு முறைகள் எவ்விதம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதில் மிகுந்த அக்கறையாக உள்ளனர். ஆனால் எவ்விதம் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும் என தோமஸ் கருத்துத் தெரிவித்துள்ளர்ர்.


பிள்ளைகளின் நடத்தைகளில், பெற்றோரின் வருமான நிலைமைகளும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகளிடம் மிகக்கூடியளவு வன்முறைப் பண்பு காணப்படுவதாக ஆய்வு காட்டுகின்றது.


எனினும் இந்த நிலைமைகளுக்குச் சிலர் எதிர்த்தாக்கம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் என்பது ஏறைய வருமானக் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கண்டறியப்பட்டுள்ளது என்பதும் கருத்திற்கொள்ளத் தக்கது.
இவற்றிற்கு குடும்ப அமைப்பிலும் குடும்பத்தில் காணப்படும் ஒவ்வாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகளும் காரணமாக அமைவதாகக் கருதப்படுகின்றது.

**

இதற்கு

1. மிகக்குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மிகக் கூடியளவு வன்முறை உடையவர்களாகக் காணப்படுவதற்கு குடும்பங்களின் குழப்ப நிலை காரணமாகின்றது.

2. தாய்வழி மனவழுத்தத்திற்குக் காரணமாக குறைந்தளவு வருமான நிலை காரணமாகின்றது

3. குழந்தைகளின் பயந்த நிலைக்கு குடும்பத்தின் குழ்பபநிலை காரணமாக அமைகின்றது எனக் கண்டறிய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

*

இந்த ஆய்வின் படி பெற்றோர் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடவேண்டியதும், கண்டிப்பிற்குப் பதிலாக அன்பினால் ஆட்சி செய்யவேண்டும் என்பதும் எடுத்துக் கூறப்படுவது அவதானிக்கத்தக்கது.


பிள்ளைகளின் நன்னடத்தைக்காக, அவர்களின் நல்லொழுக்கத்திற்காகத்தான் நாம் அவர்களைத் தண்டிக்கின்றோம் என்று அடிக்கடி கூறும் பெற்றோர்களை நாம் கண்டிருக்கின்றோம்.


ஆனால் அவர்கள் தண்டனை அளிப்பதால் பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் அல்லது பாதிப்பு எத்தகையது என்பதனை பலர் உணர்ந்து கொள்வதில்லை. தண்டனை பெற்ற பிள்ளை பெற்றோருக்குத் தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு என்பதனை உணர்ந்து கொள்வதோ அல்லது அதன் தாக்கத்தை அறிந்து கொள்வதோ இந்தத் தண்டனையின் பாற்படுமா? என்பதனைச் சிறிதேனும் சிந்தித்துப்பார்க்கும் நிலை பெற்றோருக்கு உண்டா? அல்லது சிந்தித்துப்பார்க்கிறாரர்களா? என்பது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.


பெற்றோரின் நெருக்கமான தொடர்பு, பிள்ளைகளிளிடம் இன்பகரமான சூழலைத் தோற்றுவிக்கின்றது என்பது உளவியலாளர்களின் முடிவு. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி பதின்ம வயதினை எட்டிப்பிடிக்கும் பிள்ளைகளின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளில் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறைகள் அவர்கள் பிள்ளைகளோடு கொண்டுள்ள தொடர்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஆளுமை நிறைந்தவர்களாகப் பிள்ளைகள் வளர்வதற்குப் பெற்றோரின் வளர்ப்புமுறை மிக அசியமாகும். பிள்ளைகள் உள, உடல் வலுமிக்கவர்களாக வளர்வதற்கு அவர்களுக்கு இயல்பாகவே தேவைப்படும் அடிப்படை உளவியற் தேவைகள் பூர்தி செய்யப்படவேண்டியது இன்றியமையாதது.


காப்பு, அன்பு, அரவணைப்பு, மதிப்பு (கணிப்பு), போன்ற அடிப்படைத் தேவைகள் பிள்ளைகளுக்கு மிக அவசியமானவை. இவற்றை அவர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் தங்களை அற்பணித்துச் செயற்படவேண்டியவர்கள் வேறுயாருமல்லர். அது தாய், தந்தையரே.


குழந்தை ஆரம்பத்தில் தாயின் அணைப்பினிலேயே வளர்கின்றது. பெரும்பாலான உயிரினங்களின் தன்மைகளில் தாய்மையின் பங்கு அதிகமானதாகவே அமைகின்றது. கருத்தரித்து, பெற்று வளர்ப்பதில் தாயின் பங்கு அதிகம்.


அது பறவையானாலும் சரி விலங்குகளாக இருப்பினும் சரி தாயின் அணைப்பினிலேயே குழந்தைப் பருவம் தங்கியிருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக குரங்கின் பழக்கவழக்கத்தை நாம் எடுத்து நோக்கினால் அங்கு குழந்தைப்பருவத்தில் தாயே தனது குட்டியை கட்டி அணைத்துச் செல்வதைக் காணலாம் இதன் படி மனித வளர்ச்சிப் பருவங்களிலும் இத்தகைய பண்புகளை நாம் காணமுடிகின்றது.


மனித வளர்ச்சிப் பருவத்தில் பதின்மவயதுப் பருவம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இந்தக் காலத்தில் தாய் தந்தை இருவரதும் அணைப்பு, நெருக்கம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த அவசியமானதாகக் காணப்படுகின்றது.


மனமுறிவுற்ற பிள்ளைகளை ஆராய்ந்ததில் தந்தையுடனான நெருக்கமான போக்கு பெண்பிள்ளைகளுக்கு மனமுறிவை, அல்லது மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் காணப்படுகின்றது என ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.


பெற்றோர் பிள்ளைகளுடன் அன்பாகப் பழகுவதனால் பிள்ளைகள் சாந்தமுடையவர்களாக வளர்கின்றார்கள் எனவும், கூடியளவு கண்டிப்பும், தண்டனையும் வழங்கும் பெற்றோரின் பிள்ளைகள் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள் என்னும் கருத்துக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


நம்பிக்கையும், விசுவாசமும் உடையவர்களாக உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதனால், நடத்தை மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை அவர்களே தவிர்த்துக் கொள்ளும் தன்மையைப் பெறுவார்கள்.


சிலர் கடவுளை அல்லது வேறொரு உயர்ந்ததொன்றை அல்லது சக்தியை நம்புகின்றார்கள். வேறுசிலர் தமது நம்பிக்கையினை நாட்டின்மீது, அல்லது வேறு மக்கள், பொருட்கள், அல்லது தம்மீது வைக்கின்றார்கள். நம்பிக்கை என்பது நம்புகின்றவை உங்களுக்காக வேலை செய்பவை. சித்தியடைவோம் என்று நம்பிக்கை வைத்தால் சித்தியடைவது சுலபம். இல்லை சித்தியடைய மாட்டேன் என்னும் அவநம்பிக்கை கொண்டால் சித்தியடையவே முடியாது.


எனவே இலக்கை எட்ட நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கும் போது வெற்றி பெறுவது இலகுவானதாகின்றது. தன்னம்பிக்கையும், தனது செயல்களில் விசுவாசமும் கொள்பவனே விடாமுயற்சி உடையவனாகவும் வளர்கின்றான்.


விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் ஒருவனிடத்தில் குடிகொள்ளும் போது, அது வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும். "பாரம்பரியமாக நம்பப்பட்டு வந்த மரபுவழிக் கதைகள் மறையும்போது, அதனோடு ஒட்டிய கனவுகளும் மறைந்துபோகின்றன. கனவுகள் மறைந்துபோகும் போது அங்கு எந்த மேன்மையும் இருக்காது" என யூட் இந்திய சமூகத்தினர் சொல்வதனையும் அவதானிக்கலாம்.

பிள்ளைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்த அல்லது நல்ல நடத்தை(நல்லொழுக்கம்) உடையவர்களாக, நல்ல பண்பாளர்களாக வளர்வதற்குப் பெற்றோரின் நல் உறவு, பாசம், அன்பான கலந்துரையாடல், தங்களை அர்ப்பணிக்கும் தன்மை என்பன உதவுவதாகக் கொள்ளப்படுகின்றது.


இதனால் பிள்ளை வளர்ப்பு முறைகளில் பெற்றோர் தமது போக்கையும், நடத்தையைம், நோக்கத்தையும் மிகுந்த அவதானத்தோடு பின்பற்றவேண்டியது அவசியமாகும்.


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பது போன்று பிள்ளைகளின் உளமோ மென்மையான மலரிலும் மென்மைவாய்ந்தது. அவர்களின் உளமாகிய மலர் வாட்டமடையாது என்றும் நறுமணம் வீசி இன்பகரமாக இங்கிதமான சூழலை ஏற்படுத்த அவர்களின் மனத்தில் மாசு படியாதபடி பெற்றோர் நடந்து கொள்ளுதல் இன்றியமையாததே.


***
thanks த.சிவபாலு
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு !


ஒருவரது ஆளுமையையே முடக்கிவிடுகிறது
- பா.ராமநாதன்

குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தாலோ அல்லது அழுகையை நிறுத்துவதற்கோ, பயமுறுத்தி அவர்களின் அழுகையை நிறுத்த முயலாதீர்கள். குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார். சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவ கூடாது.


இன்னும் சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுதல், ஆலவட்டம் சுற்றி விளையாடுதல் என்று விபரீதமாக கொஞ்சுவார்கள். இவைகளை குழந்தைகள் ரசிப்பதாக நினைத்துக் கொண்டு பலமுறை விளையாடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு திடீரென அழத் துவங்கி விடும்.


சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாய் கடிக்கும், பூனை கடிக்கும், மாடு முட்டும் எனச் சொல்லி பயம் காட்டி சாப்பிட வைக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை முடக்கி விடும் முட்புதர்கள் ஆவார்கள். இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவ மன பயங்கள், ஒருவரது ஆளுமையையே முடக்கி விடுகிறது என்பது உளவியல் உண்மையாகும்.


இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள்குற்றவாளிகளாகி விடுகிறார்கள்.

பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.

பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும்குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன.

அடிபட்டு, துன்புறுத்தப் பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவினர்களை வெறுத்து வளர்கின்றனர்.


குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரியவர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயாளிகளாகி விடுகின்றனர்.


குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும்.

அதிகமான பயம் காட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு உணர்வு, பிளவுபட்ட ஆளுமைக் கூறுகள், குறைபட்ட பழகும் பாங்கு என பல்வேறு அவலங்களுக்கு ஆளாகின்றனர்.


அன்புடன், பாசத்துடன், அரவணைப்புடன், தன்னம்பிக்கை வளரும் விதமாக குழந்தைகளை வளர்த்துங்கள். மன பயத்துடனே வளரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள்ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள்.


விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள். வாலிபப் பருவத்தில் ஊக்கப் படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள். கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர்.


இவர்களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும்.


அச்சம்தவிர் என்ற சொல்லுக்கேற்ப, தைரியமாக வளர குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும்.

"செய்யாதே" என தடை செய்வதே பயத்தின் முதல்படி. ஆனால் "ஜாக்கிரதையாக இதைச் செய்" என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.


ஆகவே குழந்தைகளை பய உணர்வு காட்டி வளர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு நல்ல நடத்தைப் பண்புகளை பக்குவமாக கற்றுத் தந்து, நல்ல சந்ததியை
உருவாக்குங்கள்.


***
நன்றி தினகரன்
***



"வாழ்க வளமுடன்"


நம் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி !



நம் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின.


இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.


இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.


உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.


ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.


ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....


1. சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?

நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

*

2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?

குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது.

ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

*

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?

குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

*

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?

காற்று, சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

*

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?


நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

*

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?


இது இரும்பு (iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.

*

7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?


தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

*

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?

சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

***

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்:


நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

*

நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)

*

தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.

*

கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*

புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

*

நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*

இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373

***
தேங்க்ஸ் நாஞ்சிலன்.
***


"வாழ்க வளமுடன்"


இதயம் சீராக இயங்க 27 வழிகளைப் பின்பற்றலாம் :)



ஒரு நல்ல இதயம் நாள்தோறும் சிறப்பாய் இயங்க 27 வழிகளைப் பின்பற்றலாம்.

1. வழக்கமான உணவு நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகப் பசியெடுத்தால், அப்போது பிஸ்கட், கேக், தேநீர் சாப்பிடுவதைத் தவிருங்கள். பசித்தீ மிகவும் எரிந்தால் கலோரி குறைவான பானம் அருந்துங்கள்.


2. புதுப்புது வகையான உணவு வகைகளைக் கண்டு மயங்காதீர்கள். வழக்கமான உணவே நம்பகமான உணவு என நம்புங்கள்.


3. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவைகளைக் கூடுமானவரை தவிர்த்து, மீன், கோழி இவைகளை அளவோடு உண்ணுங்கள்.


4. தொட்டுக்கொள்ள என சட்னி, சாஸ், ஜாம், ஊறுகாய் போன்ற
அனைத்தையும் ருசித்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. சாக்லேட், ஐஸ்கிரீம் கூடியவரை வேண்டாம்.

6. கொழுப்பைச் சத்து குறைவான உணவுகளே என்றும் சிறந்துது.

7. வாடி வதங்கிய காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றிலுள்ள வைட்டமின் சி காணாமல் போயிருக்கும்.

8. தேங்காயெண்ணெய், பாமாயில் தவிர்த்து சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

9. மீன்களை பொரிப்பதை விட வேகவைத்தே உண்ணுங்கள்.

10. பேரீச்சம்பழம், உலர் திராட்சை இவைகளை அடிக்கடி உண்ணுங்கள்.

11. இயன்றவரை உப்பைக் குறையுங்கள். அதுவே உயிருள்ள வரை இதயத்தைக் காக்கும்.


12. எலுமிச்சை, வெங்காயம், பூண்டு, மிளகு, கடுகு, ஜாதிக்காய் இவற்றில் தினமும் சூப் செய்து சாப்பிடுங்கள். உப்பு சேர்க்க வேண்டாம்.


13. தோலுடன் அவித்த உருளை மிகச்சிறந்த நார்ச்சத்து என்பதால், மறக்காமல் சேருங்கள்.

14. வீட்டில், அலமாரியில், டப்பாக்களில் சேர்த்து வைத்து உண்ணும் கொரிக்கும் சமாச்சாரங்களைத் தவிருங்கள்.

15. சோறு, ரொட்டி, கூழ், களி இவைகள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுகள் அளவுடன் சாப்பிட்டுப் பழகுங்கள்.

16. கூடுமானவரை எதையும் எண்ணெயில் வதக்காமல், வறுக்காமல், வேக வைத்தே உண்ணுங்கள். அதுவும் முற்றும் வேகாமல்!

17. காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி சமைக்கவும்.

18. வாரத்திற்கு மூன்று நான்கு முட்டைகளுக்குள் நிறுத்தி விடுங்கள். இன்னும் வேண்டுமெனில் வெள்ளைக் கருவுக்குத் தடையில்லை.

19. சிகரெட், குடிப்பழக்கம் அபாயமானது. இந்த ஞாபகம் வந்தால் வேகமாக பத்து நிமிடம் நடந்தால் போதும்.


20. சிறிய தட்டுக்களில் சாப்பிடுங்கள். அது நிறைய சாப்பிட்ட திருப்தியைத் தரும்.

21. நீராவியில் வேக வைத்த பொருள்களே இதயத்திற்கு என்றும் நல்லது.

22. உணவுக்குப் பின் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடுங்கள்.

23. ஆழ்நிலைத் தியானம், யோகாசனம், நடைப்பயிற்சி இவை தினசரி வேண்டும். முடியாதவர்கள் மெதுவாக நடந்தாவது பாருங்கள்.


24. நெஞ்சு வலித்தாலே, திடீர் மயக்கம் முற்றுகையிட்டாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.

25. ஒற்றைத் தலைவலி இதய நோயின் ரகசிய அறிகுறி என்பதால், ஆரம்பத்திலேயே விரட்ட முயலுங்கள்.


26. உயரத்திற்கேற்ற உடல் எடை வேண்டும். இதில் குறையிருப்பின் பட்டினி கிடக்காமல் கலோரி மூலமே எடையைக் குறையுங்கள்.


27. மாரடைப்பு நோயிருப்பின் அதையே நினைத்துக் கவலையில் ஆழ்ந்து, ஒரேயடியாக மூழ்கிவிடாதீர்கள். ஓய்வெடுங்கள். உற்சாகம் கொள்ளுங்கள் - இதயநலம் உங்கள் கையில்.


***
நன்றி: குமுதம்
***



"வாழ்க வளமுடன்"


யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை


1. நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.

2. சூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிகமிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு.


3. யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும்.. எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.


4. வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும்.


5. வியர்வை அதிகம் வராது ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும்.


6. அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவரச வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கிய ஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும்.


7. தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.


8. யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி ( மூச்சுப் பயிற்சி ) செய்து கொள்ளவும்.


9. ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.



10. தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.



11. யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரிய ஒளி பட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.



12. சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.



13. பக்கத்தில் சுவர் அல்லது தூண் இருந்தால் அதன் துணையுடன் சிரசாசனம் செய்யலாம்.



14. செய்து முடித்தபின் கடின உணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம்



15. மது, புகை, டீ, காப்பி, அதிக காரம் உப்பு புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.



16. உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.



17. மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும்.



18. ரொம்ப நேரம் கண்விழித்து வேலை செய்தவர்கள் 1 நிமிடம் சிரசாசனம் செய்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.



19. இரவில் தூக்கம் வராதவர்கள் குளித்துவிட்டு யோகநித்திரை பயிற்சியை மேற்கொள்ளலாம்.



20. பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை.



21. அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும்



22. உடனே எழுந்து வேற வேலைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் சவாசனம் முழுவிழிப்புடன் செய்யவேண்டும். தூங்கிவிட வாய்ப்புள்ளது.



23. யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.



24. யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலை இவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம்.. அல்லது அமைதியான இசையை கேட்கலாம்..



25. யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மை கொண்டிருக்கும் நேரத்தில் கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.



26. ஒவ்வொரு ஆசனத்திற்குமான மாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும்



27. கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்யவும்.



28. யோகாசனம் மனித உடலுக்கும் உள்ளத்திற்குமானது. இதில் மதப்பாகுபாடு கூடாது.


***

மதியம் யோகா செயயலாமா?

யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில்பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும்.






மனமும் உடலும் இணைவதுதான் யோகா. மற்ற பயிற்சிகளில் உடல் மிக விரைவாக இளைக்கும். ஆனால், பயிற்சியை நிறுத்தினால் முன்பைவிட அதிக எடை வர வாய்ப்பு உண்டு. யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும்.






ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும். இடையில் யோகாவை நிறுத்தினாலும் எடை ஏறாது. இயற்கை நமக்கு 24 மணி நேரம் கொடுக்கிறது. நேரப் பகிர்வு அவசியம். முதல் நாள் இரவே மறுநாளுக்கு தேவையான காய்கறி, உடைகளை தயார் நிலையில் வைத்துவிட்டு விரைவாக படுக்கைக்குச் சென்றால், அதிகாலையில் விழிப்பு வரும்.






எழுந்ததும் யோகா செய்வது மிக நல்லது. இதனால் உடல், மனம், புத்துணர்வு அடைவதோடு, சுத்தமான காற்றும் கிடைக்கும். 20 நிமிட யோகா, 16 மணி நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.






11 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு யோகா செய்யலாம். ஆனால், 8.30-க்கு காலை உணவை முடித்திருக்க வேண்டும். மாலையும் நல்லது தான். மதியப் பயிற்சி வேண்டாம்.


***
thanks நண்பர்கள்
***


"வாழ்க வளமுடன்"

கம்பியூட்டரில் சில சாதாரண தவறுகள் :(



கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:


பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன அவற்றைச் சரி செய்திடலாமா?” என்று பிழைச் செய்தி காட்டுகிறது.

இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வக்கிறோம். அவரச வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

2. ஷட்டவுண் செய்திட பவர் பட்டன்:

இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.

இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டுதான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய், மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.

இரண்டவாதாக, நீங்கள் எப்போதும் கம்ப்பயூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.

3. மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:

ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது அல்லது அதன் ஐகான் மீது டபிள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டு விடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.

இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.

4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்:

டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை மற்றவர் அறியாதபடி என்கிரிபட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிபட் ஹிruணீ விrypt போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.

5. கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:

திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதோதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும் இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.

இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய் கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.

6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:

பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.

***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "