...

"வாழ்க வளமுடன்"

07 ஏப்ரல், 2011

திட்டமிடுதலும், செயல்படுதலும் இணைந்தால்தான் வெற்றி

ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்! * ”வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர்களாகவே இருப்பார்கள்”. * இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை! “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்? * ஆனால், இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், சொல்லில் வராத செய்தி ஒன்று புதைந்திருக்கிறது! என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்? * செக்கு மாட்டிற்கும் வண்டி மாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்? இரண்டு மாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன; இது ஒற்றுமை. என்ன நடந்தாலும், செக்கு மாடு, இருக்கும் இடத்தை விட்டு ஓர் அடிகூட முன்னேறுவதில்லை! ஆனால் வண்டிமாடு கிளம்பின இடமும் போய்ச் சேரும் இடமும் வெவ்வேறு. இது வேற்றுமை. * நடந்துகொண்டே இருப்பதாலேயே, முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்பது பொருளில்லை. உடற்பயிற்சிக் கூடங்களிலும், உடல் தகுதி காணும் சில மருத்துவமனைகளிலும், ஒரு நடைக்கருவி (Treadmill) வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சிலர் அதில் நடப்பார்கள். சிலர் வேகமாக மூச்சிரைக்க, வேர்வை வழிய ஓடுவார்கள். ஆனால் ஓர் அங்குலம்கூட முன்னே செல்ல மாட்டார்கள். * இது உடற்பயிற்சிக்குப் பொருந்தும். வாழ்க்கைக்குப் பொருந்துமா? நடப்பதன் நோக்கமே ஓர் இடம் விட்டு வேறு இடம் போக வேண்டும் என்பதுதானே? “இங்கிருந்து கிளம்புகிறேன்; இந்த இடத்தை அடைவேன்” என்ற தெளிவுடன் நடப்பவனே, குறித்த இடத்தை விரைவில் அடைகிறான். தெருத் தெருவாக நடந்து கொண்டே இருந்தால் பயன் உண்டா? ‘பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது’ என்றார் கண்ணதாசன். * இது உழைப்புக்கும் பொருந்தும். ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்! * உழைப்பின்றி ‘இப்படிச் செய்ய வேண்டும்! அப்படிச் செய்யவேண்டும் என்பவர்களை ‘வாய்ச்சவடால்’ பேர்வழி என்கிறோம். ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியதைப்போல’ என்ற பழமொழியும் இவர்களைக் குறிக்கிறது. உழைப்பில்லாத திட்டமிடல் வெறும் வீண் பேச்சுதான். ஆனால் திட்டமிடாத உழைப்பு? * ‘விழலுக்கு இறைத்த நீர்’ என்ற பழமொழி இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால், இறைக்கும் நீர், எங்கே போய்ச் சேர வேண்டுமோ, அதை நோக்கிப் பாயவேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்? * திட்டமிடுதலும், செயல்படுதலும் இணைந்தால்தான் வெற்றியின் வாசல் தென்படுகிறது. நாட்டின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கு ஆணையம் (Planning commission) வைத்திருக்கிறது அரசு. திட்டமிடல் என்பதுதான் வேர். செயல்படல் என்பது, கிளைபரப்பி தளிர் விட்டு மலர் தருவது! வேரின்றி அமையாது மரம்! * ஓர் இராணுவத்திற்கு வெற்றி எதிரிகளைத் தாக்குதலால் மட்டும் வருவதில்லை! தாக்குதல் நடத்தப்போகும் நேரத்தையும், முறைகளையும், வேகத்தையும் திட்டமிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால்தான் வெற்றி சாத்தியமாகிறது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் தொடங்கி, பெரும் நிறுவனம் நடத்தும் முதலாளி வரை, திட்டமிட்டு செயல்படுபவரே வெற்றி பெறுகிறார்கள். * ஒருமுறை தோற்றவர், மறுமுறை வெல்வதற்கான முதற்காரணம், எப்போதும் திட்டமிடுதலாகவே இருக்கிறது. இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் ஹிலாரி என்னும் செய்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடவில்லை என்பதே அது. * மலையேற முடியாமல் திரும்பிய போது, எட்மண்ட் ஹிலாரி சொன்ன சொற்கள் மிக உயர்ந்தவை. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி அவர் சொன்னார்: “உன்னை நான் கண்டிப்பாக வெல்வேன்; உன் சிகரத்தில் நான் கால் பதிப்பது உறுதி. காரணம், உனக்கு இதற்கு மேல் வளர்ச்சியில்லை. அது நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் இன்னும் முயல்வேன்; வளர்வேன்”. * மலையேறுதல் என்னும் அவரது செயலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடுமையான பயிற்சி உட்பட அனைத்தும் திட்டமிட்டு செயல்பட்டபோது, அந்த செயலுக்குரிய பலன் எட்மண்ட் ஹிலாரிக்கு கிடைத்து விட்டது. ** உலகத்தையே வெல்வதற்கு வழி சொல்லவில்லையா நம் வள்ளுவன்? ‘ஞாலம் கருதினும் கைகூடும்; காலம் கருதி இடத்தால் செயின்’ * செயல்பட வேண்டிய காலத்தையும், செயல்பட வேண்டிய இடத்தையும் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுபவர்கள் எதைப் பெற விரும்புகிறார்களோ அதைப் பெற்றுவிடுகிறார்கள்! * ‘திட்டமிடல்’ என்பதும் வறட்டுத்தனமாக இருந்து பயனில்லை. அறிவினாலும், அனுபவத்தினாலும் தீட்டப்பட்டதாக அது இருக்க வேண்டும். வள்ளுவனே அதற்கும் வழிகாட்டி விடுகிறான். * 'வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்' * செய்ய விரும்பும் செயலின் தன்மையையும் அதைச் செய்து முடிக்கத்தேவையான ஆற்றலையும் முதலில் அறிந்து கொள்ளல்; செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் ஏற்கனவே உள்ளதா - இல்லை, இன்னும் பெருக்கிக்கொள்ள வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்ளல். * செயலை நாம் செய்து முடிக்க நமக்குச் சவாலாக இருப்பவர் எவர் என்றும் அவரது ஆற்றலின் அளவு என்ன? என்றும் தெரிந்து கொள்ளல்; அவருக்குத் துணையாக எவரேனும் வருவரா என்பதையும் வருபவரின் ஆற்றல் என்ன? என்பதையும் ஆய்ந்து கொள்ளல்; நமக்குத் துணையாக செயல்பட எவரேனும் உள்ளனரா என்பதையும் அவரின் ஆற்றலையும் புரிந்து கொள்ளல்! * எச்செயலை செய்வதற்கும் திட்டமிடல் என்பது அளவுக்கு கூர்மைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விளக்கவே வள்ளுவன் இவ்வாறு அடுக்கிக்கொண்டு செல்கிறான். * “ஒரு மரத்தை வெட்டுவதற்கு 45 மணித்துளிகள் நேரம் தந்தால், அதில் முதல் 40 மணித் துளிகளை ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தவே செலவிட வேண்டும்” என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? * "30 நிமிட மேடைப்பேச்சை 5 நிமிடங்களில் நான் தயாரித்து விடுவேன். ஆனால் 5 நிமிட மேடைப்பேச்சினை தயாரிக்க எனக்கு 30 நிமிடங்கள் வேண்டும்” என்றார் மிகச் சிறந்த பேச்சாளரான சர்ச்சில். * மிகச்சரியாகவும் கூர்மையாகவும் திட்டமிடுதலே சிக்கல்கள் வராமல் தடுக்கின்றன; எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கவும் வைக்கின்றன. * ‘வாழ்க்கை ஒரு மிக மோசமான ஆசிரியர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாடம் நடத்தி, தேர்வு வைத்து அதில் தேர்ச்சியடையவில்லை என்றால், ஆசிரியர் தண்டனை தருவார். வாழ்க்கையோ முதலில் தேர்வு நடத்தி, தண்டனை வழங்கிவிட்டு அதிலிருந்து ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது. * திட்டமிட்டு படிக்காத மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை தருகிறார். திட்டமிட்டு செயல்படாதவனுக்கு வாழ்க்கையே தண்டனையாகி விடுகிறது. * ‘வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றங்கள்கூட நடத்தப்படுகின்றன. விடை மிக எளிதானது. வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர் களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது. * மலர்ப் பாதையாக வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது சலிப்பினைத் தந்துவிடும். * அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை. * ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான். திட்டமிட்டு செயல்படுபவனே, வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான். * திட்டமிடுவது என்பது மிகப்பெரிய வேலை என்றும், நம்மால் அது முடியாது என்றும் எண்ணத் தேவையில்லை. எல்லோருக்குமே திட்டமிடல் என்பது ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. * காலையில் உடற்பயிற்சிக்கோ அல்லது நடைப்பயிற்சிக்கோ நாம் அணியும் உடை வேறு. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடை வேறு. ஒரு நேர்காணலுக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவல் தொடர்பாகவோ வெளியே செல்லும்போது அணியும் உடை வேறு. மறந்தும் கூட ஓரிடத்து உடையைப் பிற இடத்துக்கு நாம் அணிவதில்லை. பழக்கத்தில் நமக்குள் குடியேறிவிட்ட ஒரு சிறு அளவிலான திட்டமிடல்தான் அது. * நம்முடைய ஒவ்வொரு சொல்லும் அதை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான். * சற்று முனைப்பு இருந்தால் இந்த பழக்கம் எளிதில் கைகூடும். வெற்றி இலக்கும் எளிதாகும். * ‘தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அனந்தாள்’ என்று கைகேயியைக் கம்பன் குறிப்பதுபோல, திட்டமிட்டே கெடுதல் செய்பவர்கள் உண்டென்றால், நம்மால் திட்டமிட்டு நற்செயல்கள் செய்யமுடியாதா என்ன? * வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது. *** thanks வழக்கறிஞர் த. இராமலிங்கம் *** "வாழ்க வளமுடன்"

வேர்க்கடலையின் பயன்கள்..!

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. * சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது. * மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன. * எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. * ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம். * வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. * பின்குறிப்பு : வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கேளாறுகள் ஏற்படும். நீரிழிவுநோய், மேக நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. *** நன்றி : தினத்தந்தி *** "வாழ்க வளமுடன்"

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா? - கவனிக்க !!!

பொதுவா குழந்தைங்க மனசு கள்ளம் கபடமில்லாதது. நாம என்ன செய்யுறோமோ, அதை அப்படியே திருப்பி செய்யும் குணம் படைத்தவர்கள். அந்த பிஞ்சு மனசிலயே அவர்களுக்கு நல்ல விஷயங்கள் மனசுல பதியுற மாதிரி சொல்லிக்கொடுத்துட்டா, அதுவாவே அவங்க மாறிடுவாங்க. "பசங்க" படத்தில வரும் அந்த சின்ன பையன் சொல்லுவானே, தன்னோட பெயருக்கு பின்னாடி கலெக்டர், டாக்டர்.. அதுமாதிரி சின்ன வயசுலயே அவர்களுக்கு பழக்கப்படுத்திட்டா, அவங்க நிச்சயமா அந்த கலெக்டரோ, டாக்டரோ ஆகறதுக்கான தகுதியை வளர்த்துக்குவாங்க... * இப்போ இருக்குற பசங்களுக்கு தொலைக்காட்சி நிரம்ப பிடிக்கிறது அதில்வரும் நிகழ்ச்சிகளில் வரும் சாகசங்கள் மேஜிக் இதுபோலவே செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க .. டான்ஸ் இருக்குற பாட்டு பார்த்தா அதே போல டான்ஸ் ஆடணும்ன்னு விரும்புவாங்க அதே போல ஆபாச காட்சிகள் பார்க்கும்பொழுது அதே போல ஒரு ஆளை கூட்டி வைத்து, அதே போல (விஷயமே தெரியாம) செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க அது அவங்க மனசு.. * சின்னஞ்சிறுசுக மனசு களிமண் மாதிரி நாம எப்படி பிடிச்சு வைக்குறோமோ அப்படியே அழகான வடிவமா உருவாக்குறதும் சிதைக்கிறதும் அவங்களுடைய பெற்றோர்களுக்கு கடமை. அதே போல கடமை தொலைக்காட்சிகளுக்கும் இருக்கு... இப்போ இதுல ஒரு சின்ன குழந்தை வரைஞ்சுருக்குற ட்ராயிங்க் இருக்கு அது பாத்தீங்கன்னா, அது என்னவெல்லாம் பார்த்ததோ அதையெல்லாம் அப்படியே வரைந்திருக்கு..

இன்னொரு படம் சின்ன வயசு காதல் சினிமால வர்ற ஹீரோ, ஹீரோயினுக்கு லெட்டர் தர்ற மாதிரியான சீன் பாத்து இவங்களுக்கும் அதே ஆசை. அதை அப்படியே செய்து பாக்குறாங்க.. இதுல சின்ன பசங்கள குறை சொல்ல முடியாது. அவங்களுக்கு முன்னாடி நாம எப்படி நடந்துக்கணும்ன்னு பெற்றவர்களும், சமூகமும் தான் புரிந்து நடக்க வேண்டும்..


*


பக்கத்து வீட்டு அக்கா, நேற்று மாலை வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஏனோ முகம் மட்டும் வாடி இருந்தது.. கொஞ்சம் தனியாக அழைத்து விஷயம் என்ன வென்று கேட்க. அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்தேன். அக்காவின் ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். எப்போதும் "சுட்டி டிவி" மட்டுமே பார்க்கும் பழக்கம் உள்ளவன். படிப்பிலும் படுசுட்டி..


*


ஒரு நாள் இரவு 8.15 -க்கு அவன் டிவி பார்த்து கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அக்கா எதேச்சையாக டிவி பக்கம் கவனம் செலுத்தி உள்ளார். அதில் ஒரு கணவன் மனைவியுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது. ஏதோ மொழி பெயர்ப்பு படம் என்று அக்கா புரிந்து கொண்டார். அதில் அடுத்த சீன்.. அவர்களின் குழந்தை வந்து கதவை தட்ட.. அந்த பெற்றோர் கதவை திறக்காமல் உள்ளேயே இருந்திருக்கிறார்கள்.


*


உடனே அந்த பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று கூறிவிட்டு போய் விட்டானாம்.. அவன் சலித்துக் கொண்ட விதமே அக்காவுக்கு விபரீதத்தை உணர்த்தி இருக்கிறது.. உடன் சென்று டிவியை அனைத்து விட்டு தூங்கு போய் என்று சொல்லிவிட்டு இனி மொழி பெயர்ப்பு படங்களை பார்க்க அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.


*


ஆனால் அதற்கு மறுநாள் மாலை அக்காவின் கணவர் உறங்கி கொண்டிருக்க. அக்கா ஒரு திருமணத்திற்கு போவதற்காக உடை மாற்ற கதவை தாழ் போட்டிருக்கிறார். பள்ளி விட்டு வந்த பையன் கதவை தட தட வென தட்டி இருக்கிறான்.. அக்கா இருடா வர்றேன் அம்மா டிரஸ் மாத்துறேன்னு சொன்னதும் பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று அதே வசனத்தை சொல்லி பின் அன்று முழுதும் கோபமாகவே இருந்தானாம்..


*


குழந்தைகளுக்கான சேனல் தானே என்று பார்க்க விட்டது தவறு என்று புலம்புகிறார். தவறு யார் மீது? சுட்டி டிவி மீதா? அதை பார்க்க அனுமதித்த பெற்றோர் மீதா? பார்த்து அதை அப்படியே செயல் படுத்திய குழந்தை மீதா?


*


குழந்தைகளுக்கான படம் தான் எனினும், தேவை இல்லாத காட்சிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பு செய்யலாமே. செய்வார்களா? *** thanks வ்யாஹரி ***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "