...

"வாழ்க வளமுடன்"

08 ஆகஸ்ட், 2011

வாய் துர்நாற்றம் நீங்க - மூலிகை மருத்துவம் !!!


நமது உணவுப்பாதையில் ஏராளமான நுண்கிருமிகள் உள்ளன. இவை பெரும்பாலும் நமக்கு நன்மை செய்வதாகவே உள்ளன. ஏனெனில் நாம் உண்ணும் உணவை புளிக்கவைத்து, உடைத்து, வினையூக்கிகளுடன் சேர்த்து குளூக்கோசாகவோ, புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றுவதற்கு நுண்கிருமிகளின் பங்கு அவசியம். பெருங்குடலில் சக்கையாக வெளியேறும் உணவு, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால்தான் மலமாக மாற்றப்படுகிறது.


இயற்கையாகவே நமது உடலில் காணப்படும் இந்த நுண்கிருமிகள் நமது உடலுக்கு சம்பந்தமில்லாத, பிற நுண்கிருமிகள் நமது உடலுக்குள் நுழைவதை தடுத்துவிடுகின்றன. அவ்வாறு நுழைந்தாலும் நன்மை செய்யும் இந்த நுண்கிருமிகள் பல்கி, பெருகி, வேண்டாத நுண்கிருமிகளை அழித்துவிடுகின்றன.


நாம் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்பட்ட அல்லது கெட்டுப்போன உணவுகளை உண்பதால் இந்த நன்மை செய்யும் கிருமிகள் அழிவதுடன், தங்கள் வாழ்விடத்தை விட்டு வேறு, வேறு உறுப்புகளுக்கு செல்லத் தொடங்குகின்றன. இதனால் நமது உடலின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படுகிறது.


உணவு மாறுபாட்டால் உணவுகளை செரிக்கச் செய்யும் நுண்கிருமிகளின் தன்மை குறையும்பொழுது மலச்சிக்கல், கழிச்சல், வயிற்றுவலி, குமட்டல், வாந்தி மற்றும் வாய் துர்நாற்றம் உண்டாகிறது. வாய் துர்நாற்றத்தால் ஒருவரையும் அருகில் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகும்.



வாயை சுத்தமில்லாமல் வைத்திருப்பதாலும், வெங்காயம், பூண்டு, தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, வாயை நன்கு கழுவாமல் இருப்பதாலும், பல்லிலும் ஈறிலும் சீழ்பிடித்த புண்கள் இருப்பதாலும் நாட்பட்ட சைனஸ் தொல்லையாலும் மலச்சிக்கலினாலும் வாய் துர்நாற்றம் உண்டாகும்.


நுரையீரலில் சீழ் கட்டிகள் காணப்படுதல், நுரையீரலில் ரத்தக்கசிவு, பல், ஈறு மற்றும் இரைப்பையில் ரத்தக்கசிவு ஏற்படுதல் ஆகியவற்றின் தீவிர நிலையிலும் வாய் துர்நாற்றம் உண்டாகும். ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையிலும் வளரக்கூடிய பாக்டீரியாக்கள் வாய், பல் இடுக்கு, பற்குழி, ஈறு, தொண்டையின் உட்புறம், காது மற்றும் மூக்கின் உட்புறம் ஆகியவற்றில் பல்கி பெருகி வளர்வதே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாகும்.



வாயை நன்கு உப்பு கரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக வைத்திருப்பதும், பற்குழிகளை பல் மருத்துவரிடம் சென்று அடைத்துக்கொள்வதும், தினமும் இரண்டுமுறை பல் துலக்குவதும் நுண்கிருமிகளின் வளர்ச்சியையும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க உதவும்.


பல்வேறு வகையான நுண் கிருமிகளால் தோன்றும் வாய் துர்நாற்றத்தை நீக்கி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், பற்குழிகளில் தோன்றும் சீழ் கட்டிகள், தொண்டைப்புண்கள், நாக்கு மற்றும் தொண்டையின் உட்புறம் வளரும் நுண்கிருமிகளின் வளர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை ஸ்பியர்மின்ட் மென்தா ஸ்பிக்கேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த தோட்டப் பயிர்களான இந்த செடிகளின் இலைகள் மிகுந்த நறுமணத்தை உடையவை.


இவற்றின் இலைகளிலுள்ள கார்மோன், லிமோனின் என்னும் நறுமண எண்ணெய்கள், டையோசிஸ்மின், டையோஸ்மெடின் போன்ற பயோபிளேவனாய்டுகள், ரோஸ்மெரிக் அமிலம் போன்ற ஆவியாகக்கூடிய மருந்துச் சத்துக்கள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை போன்றவற்றில் ஏற்படும் தேவையற்ற நுண்கிருமிகளை கட்டுப்படுத்தி, புண்களை ஆற்றி, மூச்சுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஸ்பியர்மின்ட் என்ற பெயரில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைக்கின்றன.


ஸ்பியர்மின்ட் இலைகள் -10, துளசி இலைகள்-10 ஆகியவற்றை நீரில் போட்டு மூடி கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து வடிகட்டி, வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும். நாம் அன்றாடம் பல் துலக்கும் பற்பசை அல்லது பற்பொடியுடன் அரை துளி ஸ்பியர்மின்ட் எண்ணெய் கலந்து பல்துலக்கலாம்.

சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் பிப்ரஷ் என்னும் வாய் கொப்புளிக்கும் திரவ மருந்தில் ஸ்பியர்மின்ட் ஆயில் சேர்க்கப்படுகிறது. இதனை 10மி.லி., எடுத்து காலை மற்றும் இரவு படுப்பதற்கு முன் பல் ஈறுகளில் நன்கு தேய்த்து, அரை நிமிடம் வைத்திருந்து பின் வாய் கொப்புளித்துவர வாய் துர்நாற்றம் நீங்கும்.


-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,



***
thanks டாக்டர்
***



"வாழ்க வளமுடன்"

நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!



ஆண்களில் பலருக்கு இந்த பழக்கம் இருக்கும் .பேண்டின் பின் பாக்கெட்டில் மணி பர்சை வைப்பது .

இவ்வாறு பர்சை வைத்துக்கொண்டு இருக்கையில் அமர்பவர்களுக்கு நாளடைவில் முதுகுவலி வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதாக கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் மெக்கில் கண்டறிந்துள்ளார்.


இவ்வாறு அமரும்போது உடல் ஒருபக்கமாக சரிகிறது இதன் மூலமாக இடுப்பு மூட்டு நரம்பின் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தப் படுகிறது.பிட்டத்தின் வழியாகச் செல்லும் இந்த நரம்பு முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது .

எனவே மணி பர்சை பயன்படுத்துபவர்கள் இருக்கைகளிலோ இருசக்கர வாகனகளில் அமரும்போது அதை பக்கவாட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அமருங்கள் .முதுகு வலியை வரவழைப்பதை தவிருங்கள் .



***
நன்றி: திரு. பாலா
***


"வாழ்க வளமுடன்"

பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் சிறுநீர்ப் பிரச்சனை!



ஆறு ஆண்களுக்கு ஒரு டாக்டர் சிகிச்சை அளிப்பது, ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிப்பதற்குச் சமம்’ என்று ஒரு ஸ்பானியப் பழமொழி உண்டு. ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழியாக இது இருந்தாலும் கூட பெண்ணின் சிறுநீர்ப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இப்பழமொழி வெளிப்படுத்தும் கருத்து உண்மை.

ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina), சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன.


இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப் பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது.

இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.


**

ஓசையின்றி பெண்களுக்கு உள்ள இப் பிரச்சினை குறித்து விரிவான தகவல்கள்:

மகளிர் சிறுநீர்ப் பிரச்சனைக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளதா?

ஆண் பெண் இருபாலரின் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவப் பிரிவுக்கு ‘யுராலஜி (Urology) என்று பெயர்.

மகளிர் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பிரிவுக்கு ‘கைனகாலஜி’ (Gynaecology) என்று பெயர்.மகளிர் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் சிகிச்சை அளிக்க‘யுரோகைனகாலஜி’ (Urogynaecology) என்ற சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளது. இந்தியாவில் மகளிர் நோய்க்குச் சிகிச்சை அளிப்போரில் (Gynaecologists) நான்கு டாக்டர்கள் மட்டுமே இத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள னர்.

இவ்வாறு மகளிர் சிறுநீரியல் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள டாக்டருக்கு ‘யுரோகைனகாலஜிஸ்ட்’ (Urogynaecoligist) என்று பெயர்.இந்தியாவில், தமிழ் நாட்டில், சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இச் சிறப்பு பிரிவு உள்ளது.

*

சிறுநீர் கழிப்பதைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன?

ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப் பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப் பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.

இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப் பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க )Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

*

சிறுநீரை வெளியேற்றும் பிரச்சினை வகைகள் யாவை?

சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை இழப்பது அல்லது அடக்க முடியாத தன்மையில் (Incontinence) சில வகைகள் உள்ளன. அறிகுறிகளும் வேறுபட்டதாக இருக்கும்.


1. கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினை )Continuous Incontinence) பிரசவம் உள்பட அறுவைச் சிகிச்சைகளின் போது சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரை ஆகியவற்றில் ஏற்படும் காயம் (Fistula) காரணமாக இந்த வகை சிறுநீர்ப் பிரச்சினை ஏற்படும்.



ஆரோக்கியமான நிலையில் மூளையிலிருந்து நரம்புகள் மூலம் சிறுநீரை வெளியேற்றும் உத்தரவு சிறுநீர்ப் பைக்கு வருகிறது. எனவே நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவும் இத்தகைய கட்டுப்பாடு இல்லாத தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினை ஏற்படலாம்.

2. திடீர் அசைவுகள் காரணமாக ஏற்படும் கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வெளியேற்றம் பிரச்சினை (Stress Incontinence): இருமல் (Coughing), தும்முதல் )Sneezing), சிரித்தல் (Laughing), பொருள்களை தூக்குதல் (Lifting), குனிதல் (Bending), ஓட்டம் (Running) ஆகிய உடல் அசைவுகளின் போது கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் கசியத் தொடங்கும்.

3. அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்சினை :எவ்வித முன்னெச்சரிக்கை அறிகுறியும் இன்றி திடீரென சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்ப ட்டு கழிப்பறையை நோக்கி கால்களை அவசரமாக நடக்கச் செய்யும் பிரச்சினை இது. சில நேரங்களில் கழிப்பறையை அடையும் வரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ஆடையிலேயே சிறுநீர் வெளியேறி விடும்.

4. சிறுநீர்ப் பை நிரம்பி வழியும் பிரச்சினை (Urge Incontinence): இந்த வகைப் பிரச்சினையில் சிறுநீர்ப் பையிலிருந்து முழுமையாக சிறுநீர் வெளியேறாது. அதாவது சிறுநீர் முழுவதுமாக உள்ள சிறுநீர்ப் பையில் சிறுநீரகங்களிலிருந்து மேலும் சிறுநீர் வந்து சேரும். விளைவு, நீர் நிரம்பிய பாத்திரத்தில் திறந்துள்ள குழாயிலிருந்து வரும் தண்ணீர் வழிவது போல், சிறுநீர் கசியத் தொடங்கும்.


***


அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் காரணிகள் யாவை?
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் காரணிகள் :



1. காபி, டீ மற்றும் பால் சார்ந்த பொருள்கள்;

2. எலுமிச்சை ஆரஞ்சு பழச்சாறுகள், தக்காளி;

3. சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள்;

4. ஏ.சி. அறையில் உட்காருதல்.


**

சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதற்கான ஆரம்ப அறிகுறி என்ன?


பகல் நேரங்களில் 6 முதல் 7 தடவை சிறுநீர் கழிப்பதும் இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை சிறுநீர் கழிப்பதும் இயல்பானது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதாக அர்த்தம். மருத்துவரிடம் செல்ல வேண்டும்.



பிரச்சினையைக் கண்டுபிடிக்க சோதனைகள் யாவை?

வழக்கமான ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். பிறகு சிறுநீர்ப் பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறுநீர்ப் பையை முழு மையாக ஆய்வு செய்தல் மற்றும் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு உள்ளதைக் கண்டுபிடிக்கும் சிஸ்டாஸ்கோப்பி கருவி சோதனைகள் செய்யப்படும்.



இறுதியாக ‘யுரோடைனமிக் ஸ்டடி’ (Urodynamic Study) என்ற கருவி சோதனை உள்ளது. இச் சோதனையின் மூலம் சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையின் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். விடியோவுடன் இணைந்த கருவி என்பதால் பிரச்சினையைப் படமாக்கி பதிவு செய்ய முடியும். சிறுநீர்ப் பை சிறுநீர்த் தாரையின் அழுத்தம், சிறுநீர்ப் பையின் மொத்தக் கொள்ளளவு, நோயாளி சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப் பையில் தேங்கும் சிறுநீரின் அளவு (Residual Urine) போன்றவற்றை இச்சோதனை மூலம் துல்லியமாகக் கணக்கிட்டுவிட முடியும்.


நோயாளியை, சிறுநீர் கழிக்கச் சொல்லி வரைபடம் மூலம் சிறுநீர் வெளியேறும் வேகத்தைக் கணக்கிடும் சோதனையும் (கிச்சை அளிக்க உதவும்.



சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?


சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.



சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழி த்துவிட்டுப் புறப்படுவது நல்லது. ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது. இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படு கிறது. தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.



குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.



கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன் மையை மேம்படுத்த முடியும். மிகவும் எளிமையான இந்த பயிற்சிகளை (பயிற்சிகள் குறித்து டாக்டர் விளக்குவார்). பெண்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தினந்தோறும் செய்ய வேண்டிய இப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.



மருத்துவ சிகிச்சை : சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாத வகைக்கு ஏற்ப அதைத் தீர்க்க நல்ல மாத்திரைகள் உள்ளன. பிரச்சினைக்கு ஏற்ப மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.


அறுவைச் சிகிச்சை : சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது. டிவிடி (Tension Free Vaginal Tape) என்ற இந்த நவீன சிகிச்சை முறையில் டேப்பைக் கொண்டு பாதிப்புக்கு வலுப்படுத்தப்படும். இந்த நவீன எளிய சிகிச்சையை காலையில் செய்து கொண்டு மாலையில் வீடு திரும்பி விடலாம்.இச்சிகிச்சை,லாப்ராஸ்கோப்பி சிகிச்சையைக் காட்டிலும் எளிமையானதும் சிறந்த பலனை அளிக்கக்கூடியதும் ஆகும்



***
thanks pkp
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "