...

"வாழ்க வளமுடன்"

21 மார்ச், 2011

ஹஸ்த வஜ்ராசனம், வஜ்ராசான விளக்கங்களும் பயன்களும் பாகம் - 3 :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

செய்முறை:-





தரையில் ஒரு நல்ல விரிப்பை மெத்தென்று மடித்துப் போட்டுக்கொள்ள வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி முழங்கால்களை மடித்து இரண்டு பாதங்களையும் மலர்த்தி பிருஷ்டங்களைப் பாதங்களுக்கு இடையில் வசமாகப் பொருத்தி அமர்ந்துகொள்ள வேண்டும். நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு முழங்கால் முட்டிகளின்மேல் கவிழ்த்துப் பொருத்திக் கொள்ள வேண்டும். இயல்பாகச் சுவாசித்துக்கொண்டு இருக்கலாம். இவ்வாறு இரண்டு நிமிடம் முதல் பத்து நிமிடம்வரை இருக்கலாம். சிரமம் இல்லாத பட்சத்திலோ அல்லது தேவைப்படுகின்ற பட்சத்திலோ அரைமணி நேரம்கூட வஜ்ராசனத்தில் இருக்கலாம்.

*


ஒரு வாய்ப்பு:-

யோகாசனங்களைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னால் பத்மாசனம் போட்டுக் குருவணக்கம் அல்லது இறைவணக்கம் செய்ய வேண்டுமென்று எழுதியிருந்தேன். அப்படிப் பத்மாசனம் போடமுடியாதவர்கள் ஒருகாலை மட்டும் தூக்கிப்போட்டு வணங்கலாம். இப்படி ஒருகாலை மட்டும், அதாவது வலது பாதத்தை மட்டும் இடது தொடையின்மேல் போட்டுச்செய்வதற்கு அர்த்த பத்மாசனம் என்று பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதைக்கூடச் செய்ய முடியாதவர்கள், பத்மாசனத்தைச் செய்யாமலே நேராக வஜ்ராசனத்துக்கு வந்துவிடலாம்.

வஜ்ராசனத்தில் இருந்தபடியே குருவணக்கமோ, இறைவணக்கமோ செய்துவிட்டு அதற்குமேல் ஆசனங்களைத் தொடர்ந்து செய்யலாம். இதில் ஒரு பிழையும் இல்லை. சிலபயிற்சிகளைச் செய்து உடம்பு இணக்கத்துக்கு வருகின்றபோது பத்மாசனம் எளிதாக வந்துவிடும்.

*


நமது ஜீரணமண்டலம்:-


இப்போ வஜ்ராசன விளக்கத்துக்கு வருகிறோம். வஜ்ராசனம் செய்வதால் கிட்டும் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நமது உடம்பில் ஜீரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் உபயோகமாக இருக்கும்.



நமது வாயில் எப்பொழுதும் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்கும். இதை எச்சில் என்று கூறுவோம். சாதாரணமாக வெறும் வாயில் சுரக்கின்ற எச்சிலுக்கும், ஏதாவது சாப்பிடுகின்றபொழுது வாயில் சுரக்கின்ற உமிழ்நீருக்கும் விசேஷமான சில வேறுபாடுகள் உண்டு. நாம் வாயில் உணவைப் போட்டு மெல்லுகின்ற போது வாயிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரந்து வாயிலுள்ள உணவோடு கலக்கச்செய்கின்றன.


உணவு விழுங்கப்பட்டு தொண்டையிலே செல்லுகின்றபோது அங்கே காஸ்ட்ரிக் அமிலம் சுரந்து உணவோடு கலந்து இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் ஐதரக்குளோரிக் அமிலம், பெப்சின் என்ற ஒருவகை ஜீரணநீர் ஆகியவை சுரந்துஇ உணவை இரைப்பை பிசைகின்றபோது உணவோடு கலந்து விடுகின்றன. இவ்வாறு அமிலங்கள் உணவோடு கலப்பதால் உணவானது மென்மைத் தன்மையை அடைகிறது. பின்னர் இரைப்பையின் அசைவுகளினால் அந்த உணவு கூழ் போன்ற நிலைக்கு வருகிறது.

தொண்டையிலும் இரைப்பையிலும் சுரக்கின்ற அமிலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இவ்வளவு சக்திவாய்ந்த அமிலங்களால் இரைப்பையை ஒன்றும் செய்யமுடிவதில்லை. காரணம் இரைப்பையலுள்ள உணவு இவ்வமிலங்களின் தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமன்றி இரைப்பையின் சுவர்களில் மெல்லிய வெல்வெற் போன்ற ஒருவகையான பூச்சு இருக்கின்றது. இந்த இயற்கைப் பாதுகாப்பும் அமிலங்களால் இரைப்பை சேதமடைவதைத் தடுக்கிறது

சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றில் உணவு இல்லாதபோதும் அமிலம் சுரக்கும். இம்மாதிரியான விளைவுகளால் வயிற்றுப்புண் குடற்புண் ஆகியவை உண்டாகின்றன. இதையே அல்சர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வஜ்ராசனப் பயிற்சி இவ்வமிலச் சுரப்புக்களையும், அவற்றின் வீரியங்களையும் அளவுடையதாக்கிக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சுகஜீரணம் உண்டாகி அல்சர் உபாதைகளிலிருந்து தப்பிக்கொள்ள முடிகிறது.

இரைப்பையில் பிசையப்பட்டுப் பக்குவமாக்பட்ட உணவு இப்போது சிறுகுடலுக்கு தள்ளப்படுகிறது. சிறுகுடலின் நீளம் இருபது அடி என்று சொல்லாப்படுகிறது. சிறுகுடலிலுள்ள குடல் உறிஞ்சிகள் என்ற நுண்ணிய உறிஞ்சிகளால் உணவிலுள்ள சத்துப்பொருட்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. சிறு குடலில் அமிலங்கள் தேவையில்லை. அப்படியிருந்தால் சிறுகுடல் புண்ணாகிவிடும். ஆகவே பக்குவமான உணவு சிறுகுடலுக்குள் செல்லுகின்றபோதே கல்லீரல்; கணையம் (பாங்கிரியஸ்) போன்ற சுரப்பிகள் சிலவகையான ரசங்களைச் சுரந்து, சிறுகுடலுக்குள்ளே வரவிருக்கும் வீரியமுள்ள அமிலங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. இதனால் சிறுகுடல் அமிலங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் அல்கலீன் ஜூஸ் என்று சொல்லுவார்கள். நமது வயிற்றின் உறுப்புக்கள் செய்யும் எத்தனையோ வகையான அற்புதமான பணிகளில் இதுவும் ஒன்று.

*

கணையம்:-

கணையம் என்ற ஜீரண உறுப்பு வயிற்றில் இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கிறது. இது திராட்சைக் குலையினைப் போன்ற அமைப்பினையுடையது. நாளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் பணியாற்றும் இரட்டைச் சுரப்பியென்று இதனைக் குறிப்பிடுவார்கள். உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு இறங்கும்போது கணையம் கணையநீரைச் சுரந்து ஜீரணத்துக்கு உதவி, நாளச்சுரப்பியாக இயங்குகிறது. கணையத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் இன்சுலின் என்ற ஜீவரசத்தைச் சுரக்கின்றன. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரைப் பொருளை ஜீரணித்து உதவுகிறது. அப்போது கணையம் நாளமில்லாச் சுரப்பியாகப் பணியாற்றுகிறது.

*

சர்க்கரைநோய்:-

நமது உணவில் நார்ச்சத்து, தாது உப்புக்கள் மாவுப் பொருட்கள் கொழுப்பு, இரும்புச்சத்து, புரதச்சத்து, சர்க்கரை போன்ற பலவகையான சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஜீரணத்தின்போது மாற்றங்களுக்கு உள்ளாகி இரத்தத்தோடு கலக்கின்றன. இந்த வகையில் நாம்சாப்பிட்ட உணவிலுள்ள சர்க்கரையும் இரத்தத்தோடு கலந்து எடுத்தச் செல்லப்படுகிறது. இப்படிச் சர்க்கரைச்சத்து கலந்த இரத்தம் கணையத்தின் வழியே செல்லுகின்றபோது கணையத்திலுள்ள கணையத் திட்டுக்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தோடு கலக்கச்செய்து சர்க்கரையை ஜீரணித்து மாற்றிவிடுகின்றன. ஏதாவதொரு காரணத்தால் கணையம் தனது செயல்திறன் குன்றி இன்சுலினைச் சுரக்கத்தவறினால், இரத்தத்திலுள்ள சர்க்கரை வேதிமாற்றத்துக்க உள்ளாகாமல் இரத்தத்தோடு கலந்த உடம்பில் ஓடுகிறது.

விஞ்ஞானமும் மருத்தவமும் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கின்றபோதும் மனிதனை வாட்டுகின்ற சில நோய்களை விரட்டிவிட முடியவில்லை. அத்தயைக தீர்க்கவே முடியாத நோய்களுள்ளே மருத்துவ உலகுக்கு ஒரு மாபெரும் சவாலாக இன்றுவரை சர்க்கரைநோய் இருந்துவருகிறது. கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனால் கிணற்றைத் தூர்வாரியோ, ஆழப்படுத்தியோ சரக்கும் தண்ணீரைப் பெறவேண்டு மேயல்லாது, வேறு கிணற்றிலேயிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து, வறண்ட கிணற்றில் ஊற்றிக்கொண்டு பயன்பெறுவது போன்ற முறைதான் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாகும். என்ன செய்யமுடியும். மருத்துவத்தில் இதைத்தவிர வேறுவழிமுறைகள் எதுவுமில்லை.

சர்க்கரைநோய் பரம்பரையாக வருகின்ற நோய், அது நம்மையும் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்துடன் பலபேர் வாழ்கிறார்கள்;. யோகாசனங்கள் போன்ற சரியான முறையொன்று இருக்கின்றதே என்பதையும் இதன்மூலம் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்த முடியுமே என்பதையும், பரம்பரையாக வருவதென்றாலும் அதைத் தடுத்து ஒரு புதிய பாரம்பரியத்தைப் படைத்துவிடலாமே என்பதையும் மக்கள் உணரத் தொடங்கிவிட்டால் சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அணுகாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

பிறப்பிலேயே யாரும் பிறவிச்சர்க்கரை நோயாளியாகப் பிறப்பதில்லை. இயற்கை ஒவ்வாருவருக்கும் கணையத்தைப் படைத்துத்தான் வதை;திருக்கிறது. இருப்பினும் இந்நோய் இடைக்காலத்தில் வருவதற்குக் காரணம் உடல்உழைப்பு இல்லாததுதான் என்றாலும், கடினாக உழைப்பவர்களுக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. நல்ல உடற்பயிற்சி செய்யும் பயில்வான்கள்கூடச் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றிலுள்ள உறுப்புக்களுக்கு சரியானபடி இரத்தஓட்டமும், பயிற்சியும் இல்லாமையே இதற்கெல்லாம் காரணமாகும்.

உடற்பயிற்சிகள் உடம்மை எடுப்பாக வைத்திருக்க உதவலாம். ஆனாலும் வயிற்றின் உள்ளுறுப்புக்களுக்கும் ஜீவ ஆதாரமான கோளங்களுக்கும் (Glands) சரியான பயிற்சி வேண்டும். அப்போதுதான் அந்த உறுப்புக்கள் நல்ல நிலையில் ஆரோக்கியமாகத் தமது பணி குன்றாமல் நெடுநாள் உழைத்துப் பணியாற்றக் கூடியனவாக இருக்கும். இவவாறு உடம்பின் வெளி உறுப்புக்களுக்கும், உள்ளுறுப்புக்களுக்கும் சேர்த்துப் பயிற்சி தரவேண்டுமானால் அது யோகாசனங்களால் மட்டுமே முடியும்.


வேறெந்த வழியிலும் எளிதாக இதைப் பெறமுடியாது. ஆகவே மனித உடம்பு பூரண நலத்தோடு விளங்க வேண்டுமானால் யோகாசனப் பயிற்சி அவசியமாகும். இவ்வாறு யோகாசனப்பயிற்சி செயவதன்மூலம் விஞ்ஞானத்துக்கும், மருத்துவத்துக்கும் சவாலாக இருக்கின்ற சர்க்கரை நோய்க்கு மட்டுமன்றி மற்ற எல்லாக் கொடிய நோய்களுக்கும் யோகாசனங்களால் முடிவுகட்டிவிடலாம். இனி ஆசன விளக்கத்துக்கு வருவோம்.

***

ஹஸ்த வஜ்ராசனம்:-


செய்முறை:-

வஜ்ராசனத்தில் அமரவேண்டும். இடதுகையை முழங்கைவரை மடித்து மடிமேல் வைத்துக் கையை வயிற்றோடு பொருத்திக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு முன்னால்குனிந்து நெற்றியைத் தரையை நோக்கிக் கொண்டுவரவும். வலது கையைப் பக்கத்தில் ஊன்றிக் கொள்ளலாம். அல்லது எப்படி வேண்டுமானாலும் வசதிப்படி வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பத்துநொடி இருந்தால் போதும் பின்னர் நிமிர்ந்து மூச்சை இழுத்துக்கொளலாம்.

இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிய பின்னர் வலது கையை மடக்கி மடிமேல்வைத்து வயிற்றோடு பொருத்திக்கொண்டு, மூச்சை வெளியேற்றிவிட்டு, முன்னால் குனிந்து முன்போலவே பத்து நொடிகள் இருந்தபின் நிமிர்ந்துகொள்ளவும். இவ்வாறு இடதுகை ஒருமுறை வலதுகை ஒருமுறை என்று செய்தால் அது ஒருசுற்று ஹஸ்தவஜ்ராசனம் செய்ததாகும். இதைப்போல ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும். ஒருவாரம் அல்லது பத்துநாள் பயிற்சிக்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் செய்தால் போதும். அதற்குமேல் தேவையில்லை. இதைப்போலவே இரண்டு கைகளையும் பொருத்திக் கொண்டும் செய்யலாம் (படத்தைப் பார்க்கவும்).

*


குறிப்பு:-

இவ்வாசனத்தைச் செய்யும்பொழுது சிலர் மூச்சை உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. மூச்சு நுரையீரலிலும் வயிற்றிலும் நிறைந்திருந்தால் முன்னால் குனிவது சிரமமாக இருக்கும். கை வயிற்றில் புதைந்து அழுத்துகின்ற போது இன்னும் கடினமாக இருக்கும். ஆகவே மூச்சை வெளியெற்றி விட்டுத்தான் செய்யவேண்டும்.

வேறுசிலர் நன்றாகப் படியும்படி குனிய வேண்டுமென்பதற்காகப் பிருஷ்டங்களைத் தூக்கிக் கொள்வார்கள். அப்படியும் செய்யக்கூடாது. குனியும்போது நெற்றி தரையில் படவேண்டும் என்ற அவசியமில்லை. தொந்தி இருப்பவர்கள் அப்படிச் செய்யவும் முடியாது. ஆகவே பயிற்சியாளர்கள் சரியான ஆசனநிலையை மனதிற்கொண்டு, தங்களால் முடிந்தவரை குனிந்து செய்யலாம். நாளடைவில் சரியான நிலைக்கு வந்தவிடும். எந்த யோகாசனமாக இருந்தாலும் அது மிகச்சரியாக வரவேண்டுமென்று கருதி உடம்பை வருத்திக்கொண்டு ஆசனங்களைப் பயிலக்கூடாது.

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "