...

"வாழ்க வளமுடன்"

19 ஜூலை, 2015

பெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குழந்தைகளிடம் நமக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கிற அக்கறையும் கேள்வியும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு எழுவதில்லை என்கிறார் விழியன்.

குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து எழுதி வரும் விழியன், குழந்தைகளுக்கு கதைகள் கூறுவதுடன், அவர்களை பாடபுத்தகம் தாண்டியும் வாசிக்க வைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

கடந்த வருடம் வெளியான இவரின் ‘மாகடிகாரம்’ எனும் சிறுவர் நாவல் புத்தகம், இதுவரை சிறுவர் இலக்கிய விருதுகள் மூன்றினைப் பெற்றுள்ளது.

‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘டாலும் ழீயும்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’ போன்றவை பரவலாகப் பேசப்படும் இவரின் பிற புத்தகங்கள். இவரின் ‘உச்சி முகர்’ புத்தகம், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை விவரிக்கும் அழகிய பதிவு.

சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கட்டுரைகளையும், தன் மகள் குழலியுடன் நடக்கும் உரையாடல் மூலமாக பகிர்ந்து வருகிறார் விழியன்.

சென்னை, தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியல் வல்லுனராக பணியாற்றி வரும் விழியன், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கருத்தில் வைக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள் சொல்கிறார் இங்கு!

அதுவும் தவறு, இதுவும் தவறு

‘‘கணவன், மனைவி என இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில் வேலைச் சுமையால், குழந்தைகளை பணியாள் அல்லது வீட்டுப் பெரியவர்களிடம் மொத்தமாக ஒப்படைத்துவிட்டு, படிப்பு, நண்பர்கள், தோழிகள், பாக்கெட் மணி எவ்வளவு, இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என அவர்களைப் பற்றிய தற்காலக் கவலையை மறந்து, அவர்களின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கும் பெற்றோர் ஒரு வகை. இப்படிக் கட்டுப்பாடற்று வளரும் குழந்தைகளால் சின்னச் சின்னக் கண்டிப்புகளைக் கூட தாங்க முடியாமல் போகிறது.

கண்டிப்பான பெற்றோராக இருக்க எண்ணி, அத்தியாவசிய சுதந்திரத்தைக்கூட அவர்களுக்கு வழங்காமல், குழந்தையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஏதோ டிடெக்டிவ் ஏஜன்ட் போல கண்காணித்து, இயல்பான குறும்புகளையும் குற்றமாக பாவித்து தண்டனை கொடுக்கும் பெற்றோர் மற்றொரு வகை.

இப்படியான கட்டுப்பாடுகளால் இறுக்கப்படும் குழந்தைகள் அனைவருமே, 'சந்தோஷம்' என்கிற வார்த்தையுடன் 'பெற்றோர்' என்கிற வார்த்தையை எப்போதும் பொருத்திப் பார்க்காக சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, உங்களின் கண்டிப்பு என்பது, குழந்தைகளை எல்லா விஷயத்திலும் உங்களுக்கு அடங்கிப் போகிறவர்களாக வளைப்பதாக அல்லாமல், அவர்களின் நன்வளர்ச்சிக்கானதாக இருக்கட்டும். அதேபோல, சுதந்திரம் என்பது அவர்களுக்குத் தேவையான அளவுக்கு, தேவையான விஷயங்களுக்கு மட்டுமே வழங்கப்படட்டும்.

குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?


பரிபூரண அன்பு! அது நிச்சயம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால், அதனை செலுத்தும் விதத்தில்தான் தவறுகள் நிகழ்கின்றன அல்லது குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை சந்திக்க முடியாமல் போகிறது. குழந்தைகளிடம் நீண்ட நேரம் பேசவேண்டும். அவர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், தோல்விகளின்போது தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் நண்பர்களைப் பற்றி அவர்களாகச் சொல்ல வைக்க வேண்டும். அன்றைய தினத்தின் நிகழ்வுகளை அவர்களாகப் பகிர வைக்க வேண்டும். பெற்றோர்களை ஒரு தோழன், தோழி என குழந்தைகள் பாவிக்க வேண்டும். இது எல்லாம் எப்போது சாத்தியம்?

அவர்களுடன் ‘குவாலிட்டி டைம்’ செலவழிக்கும்போது. குழந்தைகளுக்கு நீண்ட காலம் தன் பயங்களையும் ரகசியங்களையும் பாதுகாக்க முடியாது. தொடர் உரையாடல்கள் மூலம் அந்த பயங்களையும், ரகசியங்களையும் நீக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ‘இதனை நம் பெற்றோரிடம் பகிர்ந்தால், எந்த பிரச்னையும் இருக்காது ’ என்கிற நம்பிகையை அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!
குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!

பெற்றோர்கள், தங்களின் நீட்சியாகவே குழந்தைகளைப் பார்க்கிறார்கள். தாங்கள் சிறுவயதில் தவறவிட்ட விஷயங்களை குழந்தைகள் மீது தங்களுக்கே தெரியாமல் திணிக்கிறார்கள். எந்தத் திணிப்பும் கசப்பாகத்தான் முடியும். குழந்தைகள் பெற்றோரின் அங்கம் அல்ல. அவர்கள் தனி ஜீவன்கள். அவர்களுக்கு என்று ஆசைகள், வெறுப்புகள், கனவுகள் இருக்கும். அதனைப் புரிந்து கொண்டு, அவர்களின் இலக்குகளை அடைய துணை நிற்பதே பெற்றோரின் கடமை.

உங்களின் கனவை அவர்கள் மூலமாக நிறைவேற்றும் எண்ணம், தவறு.

ஜனநாயகக் குடும்பம்!

குடும்பத்தில் அமைதியை குழந்தைகள் விரும்புகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு மத்தியில் நடக்கும் முறையற்ற, தேவையற்ற விவாதங்கள், குழந்தைகளை அச்சுறுத்துகின்றன.

இதைத் தவிர்த்திட வேண்டும். மேலும் குடும்ப முடிவுகளில் அவர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூற விரும்புவார்கள். குறைந்தபட்சம் விவாதங்களில் அவர்களை பங்குகொள்ளவாவது செய்யுங்கள்.

இது ஒரு ஜனநாயகக் குடும்பத்தை நோக்கிய நகர்வு. இதுதான் தற்கால குழந்தைகளின் விருப்பமும் கூட!’’

நிறைவேற்றுவோமா குழந்தைகளின் விருப்பங்களை !

- வே.கிருஷ்ணவேணி



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "