...

"வாழ்க வளமுடன்"

30 மே, 2011

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.

பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.


''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை.


இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும்.


இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.


உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும்.



ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.


நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது.


பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.


அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.



இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம்.


இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.


''நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது.


பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.


சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

- சி.சரவண


***
thanks நாணய விகடன்
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "