...

"வாழ்க வளமுடன்"

01 டிசம்பர், 2010

காய்ச்சல் என்பது நோயல்ல;அறிகுறி தான்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எனக்கு காய்ச்சல் இருக்கிறது; தலை சுடுகிறது; தொட்டுப் பார்...' என, காய்ச்சல் வந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். தொடு உணர்ச்சி மூலம், காய்ச்சலின் அளவைக் கண்டறிவது கடினம்.


நம் கை, "தெர்மாமீட்டர்' அல்ல; காய்ச்சலும், தொட்டால் தெரியும் வகையிலான பொருள் அல்ல. பாதரச டியூப் அல்லது டிஜிட்டல் வகையிலான தெர்மா மீட்டரைக் கொண்டு மட்டுமே, நம் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இப்போது நெற்றியில் வைத்து, வெப்பநிலை கண்டறியும், மருத்துவ பட்டையும் பயன்பாட்டில் உள்ளது.

*

காய்ச்சல் ஏற்பட்டாலும், அது குறித்து பயப்படத் தேவையில்லை. அதாவது, நோயை எதிர்த்துப் போராடும் திறன், நம் உடலக்கு உண்டு. இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு முறை அது. பிரிட்ஜ் அல்லது ஏர் கண்டிஷனரில் அமைந்துள்ளது போல், நம் உடலிலும், அதற்குத் தேவையான வெப்பத்தைக் கண்காணித்து சமப்படுத்தும் பணியை மூளையில் உள்ள ஒரு பகுதி செய்கிறது.

*

இது, நரம்புகளிலிருந்து சிக்னலைப் பெற்று, உடல் வெப்பத்தைச் சீராக வைக்கும் வகையில் செயல்படுகிறது. உடல் வெப்ப நிலையும், அதிகாலை 2 முதல் 6 மணிவரை, குறைவாகவும், மாலை 4 முதல் 8 மணி வரை அதிகமாகவும் இருப்பது வழக்கம்.

*

வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வை வெளியேறும். வியர்வை காயும்போது, வெப்பநிலை சீராகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை குறையும்போது, நம் மூளையில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி, உடல் நடுக்கத்தைத் தூண்டி விடும்.

*

இதனால், தசைகளுக்கு வேலை அதிகரித்து, உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும். உடல் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி, வெப்பம் வெளியேறாமல் தடுக்கும். உடலைத் தாக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள், பைரோஜென் என்ற, வெப்பத்தை அதிகரிக்கும் பொருளை உருவாக்குகின்றன.

*

இதனால் தான், உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. எனினும், இது போன்ற தொற்றுக்களால் மட்டுமே, காய்ச்சல் ஏற்படும் எனக் கூற முடியாது. கடும் உடற்பயிற்சி, கட்டிகளை உருவாக்கும் செல்கள் சுரக்கும் ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் நோய்களாலும், காய்ச்சல் ஏற்படும்.

*

பள்ளி செல்லும் குழந்தைகள், ஆண்டுக்கு ஐந்தாறு முறை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 80 சதவீதக் குழந்தைகளுக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல், "ஆன்ட்டிபயாடிக்ஸ்' போடாமலேயே, 3 அல்லது 4 நாட்களில் குணமாகி விடும். 20 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே, தொற்று தீவிரமடைந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

***

குழந்தைகளை எப்போது டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?

* பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைகள்.
* போதிய அளவு நீராகாரம் குடிக்க முடியாத நிலையில் இருந்தால்
* உடலில் நீர்ச்சத்து குறைந்து போனால்
* வலிப்பு ஏற்பட்டால்
* 72 மணி நேரத்திற்கு மேல், காய்ச்சல் தொடர்ந்தால்
* அழுகையும், கோபமும் தொடர்ந்தால்
* குழப்பமாக, ஏதேதோ பேசினால்
* உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால்
* மூச்சு விடத் திணறினால்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் காண்பிக்கவும்.


*

சரியான இடைவெளி விட்டு, போதுமான அளவு மருந்து கொடுத்தால், வீட்டில் இருந்தபடியே காய்ச்சலை குணப்படுத்தலாம். குழந்தையின் உடல் எடையைப் பொறுத்து, பாரசிட்டமால் மருந்தின் அளவு மாறுபடும். ஒரு கிலோ எடைக்கு 10 முதல் 15 மிலி கிராம் பாரசிட்டமால், 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென பாரசிட்டமால் மாத்திரை (125 மி.லி., கிராம்), பாரசிட்டமால் சிரப் (5 எம்.எல்., = 125 மி.லி., கிராம்) ஆகியவை உள்ளன.


*

பாரசிட்டமாலுக்கு பதிலாக, "ஐபுபுரூபென்' மாத்திரை கொடுக்கலாம். இதற்கு டாக்டர்களின் பரிந்துரை அவசியம். எந்த மருந்தும் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது ஆபத்து. 10 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு, ஆஸ்பிரின் மருந்து கொடுக்கக் கூடாது. குறிப்பிட்ட சில வகை காய்ச்சலுக்கு மட்டுமே, டாக்டர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். எனவே, டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடக் கூடாது.

*

காய்ச்சல் கண்ட குழந்தையை ஈரத் துணியால் துடைத்து, மின் விசிறி மூலம் காய வைக்க வேண்டும். சுடுநீர் பயன்படுத்தக் கூடாது; ஐஸ்வாட்டரிலும் குழந்தையை நிற்க வைக்கக் கூடாது. பருத்தியால் ஆன,தொளதொள உடையை அணிவிக்க வேண்டும். தடிமனான உடை, போர்வையால் சுற்றுதல் ஆகியவை, உடல் சூட்டை அதிகரித்து விடும்.

*

குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது, நோய்தடுப்பு மருந்துகள் போட்டதற்கான சான்று அட்டையை, எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அட்டையைப் பார்த்தாலே, குழந்தைக்கு என்னென்ன நோய்கள் தாக்காதிருக்கும் என்பதைக் கண்டறிந்து விட முடியும். சில குழந்தைகளுக்கு, உடல் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போது, வலிப்பு ஏற்படும்.

*

பெரும்பாலும், இந்த வலிப்பு, தானாகவே நின்று விடும். எனினும், டாக்டரிடம் காண்பிப்பதற்கு முன், குழந்தைக்கு அடுத்த முறை வலிப்பு ஏற்படாத வகையில், காய்ச்சலைக் கட்டுப்படுத்த, பாரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டும்.
டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு முன், முதலுதவி போல பாரசிட்டமால் கொடுப்பது அவசியம்.

*

குழந்தைக்கு நோய் தடுப்பு மருந்துகள் போடுவதற்கான அட்டவணையை டாக்டரிடம் கேட்டுப் பெற்று, தனி "பைலாக' பாதுகாக்க வேண்டியது அவசியம். எத்தனை முறை, "பிரிஸ்கிரிப்ஷன்' வாங்கினாலும், அதை, அந்த "பைலில்' போட்டு வைத்து விடுங்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல், அனைவருக்குமே, காய்ச்சல் குறித்த அளவை, "பைலில்' எழுதி வைக்க வேண்டியது அவசியம். 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை சென்றால், 4 முதல் 6 மணி நேர இடைவெளியில், 500 எம்.ஜி., பாரசிட்டமால் உட்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டும்.

*

உடல் நடுக்கம், குளிர், வலிப்பு, அடிவயிறு வலி, வேறு உபாதைகள், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னை ஆகியவை ஏற்படும்போது, நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகள் உட்கொள்ளும்போது, டாக்டரிடம் செல்ல வேண்டியது அவசியம்.
*
"ஆன்ட்டிபயாடிக்'குகள், பாக்டீரியாவுக்கு மட்டுமே எதிராகச் செயல்படக் கூடியவை; வைரஸ்களுக்கு எதிராக அல்ல. "ஆன்ட்டிபைரடிக்' மற்றும் "ஆன்ட்டிபயாடிக்' ஆகியவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. டாக்டரின் ஆலோசனை இல்லாமல், இத்தகைய மருந்துகளை உட்கொள்வது, நோயை குணப்படுத்தாது; ஆபத்தை விளைவித்து விடும்.


***
நன்றி தினமலர்!
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "