...

"வாழ்க வளமுடன்"

18 ஜூலை, 2011

கர்ப்பப்பை புற்றுநோயும் அதன் தாக்கமும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்.



மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.




உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன.



தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.



புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிடாமல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.



செர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.



பாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது.



எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.



எச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.



கேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்:
மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள். இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.



எனினும், பெரும்பாலான மக்களிடையே, புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழு விவரங்களை யும் அறிந்துகொண்டால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும். புற்றுநோய் என்பது, உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான வளர்ச்சி நிலையாகும். புற்றுநோய், கட்டியாகவும் இருக்கலாம். அல்லது ஆறாத புண்ணாகவும் இருக்கலாம்.

*

தலை முதல் கால் வரை

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது. அபாய அறிகுறிகள் என்ன?


நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி, மச்சத்தின் நிறம் அல்லது உரு மாற்றம், நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம், உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழித்தல் போன்ற வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் ஏழு அபாய அறிகுறிகளாகும்.


*

வயது வரம்பு உண்டா?

எந்த வயதினரையும் தாக்கக் கூடியது இது.புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல.பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களுமே புற்று நோய் ஏற்படக் காரணம்.உதாரணமாக, புகையிலை அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. பெற்றோரில் ஒருவருக்கோ இருவருக்குமோ இருந்தால், குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். புற்றுநோயின் தொடக்க நிலையில், ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் புற்று நோயாளி என்று சொல்ல முடியாது. நோய் முற்றிய நிலையில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மட்டுமே சொல்ல முடியும். எனவே, அவ்வப்போது முறையாகப் பரிசோதனை செய்துகொள்வது ஒன்றுதான், புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் வழியாகும்.


*

பச்சைக் காய்கறிகள் உதவும்:

புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட எந்த வகை உணவும் காரணம் என்று இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. எனினும், நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொண்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.


நோயின் தொடக்க நிலையில் வலி இருக்காது. எலும்பு அல்லது நரம்புகளில் பரவும்போது மட்டுமே வலியிருக்கும்.


ரத்தப்போக்கு இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறிதான் என்றில்லை. ஆனாலும், ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது அவசியம். சரியான முறையில் உரிய சிகிச்சை செய்துகொண்டால், புற்றுநோயாளிகளும் மற்றவர்களைப்போல இயல்பாக வாழ முடியும்.



ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டு, உரிய சிகிச்சை அளித்தால், 80 முதல் 90 சதவீதம் நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியும். பெண்களுக்கு "பேப் ஸ்மியர்' என்ற சோதனை மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அறுவைச் சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.


புற்றுநோய்க்கு ஒரு முறை சிகிச்சை பெற்று, குணமடைந்த ஒருவருக்கு ஐந்தாண்டுகள் வரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால், அவருக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனினும், சிலவகை புற்றுநோய்கள், 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டு வர சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எனவே, முற்றிலும் குணமடைந்தாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.


*


மூன்று வகை சிகிச்சைகள்:

பொதுவாக புற்றுநோய்க்கு மூன்று வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன கதிரியக்க சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மருத்துவ சிகிச்சை. புற்றுநோயாளிகளில் 80 சத நோயாளிகளுக்கு கதிரியக்கச் சிகிச்சை தேவைப்படுகிறது. இது முதன்மை சிகிச்சைகளுடன் (அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை) சேர்த்தோ அல்லது நோயின் தன்மைக்கும் அது பரவியிருக்கும் நிலைக்கும் ஏற்பவோ அளிக்கப்படுகிறது.


பத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் நம் நாட்டில் அதிகமாகக் காணப்பட்டாலும், பெண்களை அதிகம் பாதிப்பது கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஆண், பெண் இருபாலரையும் அதிகமாகத் தாக்கக் கூடியது, வாய்ப் புற்றுநோய்.



இந்த மூன்று புற்றுநோய்களுமே மிகக் கொடிய, உயிர்க்கொல்லிகள் என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை ஆகும்.




***
thanks administrator
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "